*பரம்*
மேலானது, உயர்ந்தது, அப்பாலானது, அப்பழுக்கு இல்லாதது முதலிய பொருள்களைத் தரும் சொல் 'பரம்' என்பதாம். பரம்பொருள், பரமன், பரதேயி, பரமானது என்ப வற்றில் இப்பொருள்கள் முறையே அமைந்திருத்தல் அறிக.
'கடவுள்' என்பதிலுள்ள கடந்த என்னும் பொருள் 'பரம்' என்பதிலும் உண்மையைக் 'கடல், பரவை' என்பவற்றொடும் எண்ணிக் கொள்க..
மொழிபெயர் தேயத்தரே இரந்துண்பாராக இருந்த நாளில் எழுந்த சொல்லாட்சி 'பரதேயி' என்பதாம். 'பரதேசி' என வழங்குதல் 'தேஎம்' 'தேம்' தேயம் என்பவை தேசமென வேற்றுச் சொல்லாகக் கொள்ளப்பட்டதன் பின்னை வடிவமாம்.
பரம் என்பது பாரம் என்னும் பொருளிலும் வரும். பரவிய இடம் 'பார்' எனப்படுதல் போல், பரவிய சுமை 'பாரம்' ஆயிற்று பாரவண்டி, பாரச்சட்டம், பார், என்பவற்றை எண்ணுக.
"நிரைப் பரப் பொறைய நரைப்புறக் கழுதை"
எனக் கழுதையின் முதுகில் இருபாலும் சுமை ஒழுங்குபட அமைத்துச் செல்லும் முறைமை அகப்பாட்டிலே விளங்கு கின்றது (207). கழுதையின் முதுகுப் பரப்பினும் மிக்கு இருபாலும் நிரந்து பரந்து கிடக்கும் சுமை. 'நிரைப்பரம்' என்னும் சொல்லாட்சியால் விளங்குதல் நயமிக்கதாம்.
கள்ளமில்லாத வெள்ளைத் தன்மையைப் 'பரம்' என்பதும், அத்தகையரைப் 'பரமானவர்' என்பதும், அவர்தம் போக்கினை செயலினை-ப் 'பரம் போக்கு' என்பதும் வழக்கில் உள்ளமை அறியத் தக்கன. 'பரமேளம்' என்பதும் பரம்போக்கே.
அகன்ற வாயையுடைய அகல்வாய்ச் சட்டியைப் 'பரவச் சட்டி' என்பதும், அயலே இருந்து வரும் வாக்கைப் 'பரவாக்கு' என்பதும் நினையலாம். உடலுக்குப் 'பரம்' என்பதொரு சொல்லுண்டு.பரம், பாரம் என்னும் பொருளது. உடலைக் கொண்டே உயிர்வாழ்வு இயல்வது
என்றாலும், உடலைக் கொண்டே அருள் தொண்டு இயல்வது
என்றாலும், அவ்வுடலைப் பேணிக் கொள்ளவேண்டிய தீராக்கடனும் இருத்தலால், அவர்க்குத் தம்முடம்பு பேணுதலும் சுமையாய் அமைகின்றதாம். அதனாலன்றே,
"மற்றும் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பும் மிகை"
என்றார் திருவள்ளுவர் (345), "இப்பரந் துடைத்தவர்" என்னும் கம்பர் வாக்கு (கடிமணப் 69), பரம் என்பதற்கு உடல் என்னும் பொருளுண்மை காட்டும்.
பரம்பரம் :
பரம்பரம் அப்பாலுக்கு அப்பாலாம் வீடுபேற்றைக் குறிப்பது உண்டு. 'பத்திசெய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்' என்னும் திருவாசகம் (2.119) இதனைத் தெளிவிக்கும். பரம்பரத்து உய்ப்பவன் 'பரம்பரன்' என்க. (திருவாய்.4.3:9)
ஒன்றற்கு மேல் ஒன்றாய் உயர்ந்து விளங்கிவருதல் 'பரம் பரை' எனப்படுகின்றது. 'சென்று சென்று பரம்பரமாய்' எனவரும் திருவாய் மொழி (8.8:5) இதனைக் காட்டும்.
கல்லாஞ் சரளை பரவிக்கிடக்கும் வறண்ட நிலம் 'பரம்பு' எனப்படும். பரவிய நிலம் என்னும் பொருளில் பரம்பு ஆளப்படுவதும் உண்டு. "பரம்பெலாம் பவளம்" என்னும் கம்பர் வாக்கு (நாட்டுப்.2) நிலப்பரப்பை அதிலும் மருத நிலப்பரப்பைக் காட்டுவதே வரம்பு வரப்பென வலித்தல் அடைவது போலப் 'பரம்பு 'பரப்பென ஆகும். பரம்பு அளவு என்பதே பரப்பளவு ஆயது வெளிப்படை. பரப்பு என்பது செண்டு வெளி எனப் பொருள் தருதல் பெருங்கதையில் கண்டது (3. 25 : 10). செண்டுவெளியானது குதிரையோடும் வெளி, முற்றம் என்பன.
(மொழி நூற்கதிரவன் இரா.இளங்குமரனார் அவர்களின் "வேர்ச்சொல் விரிவு" நூல்வழியாய் ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment