*எப்படிப் புரியவைப்பேன்...*
உன்னைப் பாராமல்
கடலலை போல்
ஓலமிட்டுத் திரிகிறது
மனசு.
உன்னை
நினைத்து நினைத்து
உருகி வழிகிறது
மெழுகைப் போல்
உள்ளம்
உன்
காலடி ஓசைக்காய்
காத்துக் கிடக்கும்
செவிகள்
உன்
வரவை எதிர்பார்த்து
பூத்துக் கிடக்கும்
விழிகள்
இரண்டுமே
ஏக்கத்தால் அடைகின்றன
ஏமாற்றம்
உன்
பூவிதழின் புன்னகையால்
மட்டுமே வெளிச்சமாகும்
நெஞ்சம்
உன்
கிள்ளை மொழி
கேட்டால் போதும்
என் எலும்புக்குள்ளும்
தேன்சுரக்கும்.
உன்
உள்ளங்கைச் சூடு
அதுதான் எனக்கான
இளவேனிற் காலம்
உன்
மூச்சுக் காற்றில்
கலந்திருக்கிறது
எனக்கான உயிர்க்காற்று.
இனியவளே
உனக்கான என்னை
எப்போது புரிந்துகொள்வாய்?
என்
எழுத்துகளைப் புரிந்துகொள்ளாத
உனக்கு
எப்படிப் புரியவைப்பேன் நான்.
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment