இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 26 May 2021

ஆய் - தாய் - சொல்லாய்வு

ஆயீ - ஆய்... (சொல்லாய்வு)

ஆ-ஈ-ஊ - என்னும் நெட்டுயிர்ப்பு ஒலிகளே முதற்கண் உணர்ச்சியொலிகள் ! அவற்றில் ஆ-ஈ என்பவற்றைத் தொடர்ந்தொலித்து ஆஈ > ஆயி>ஆய்> அய்> ஐ என்றவாறு குறுக்கி யொலிக்கப் பயின்று அதனை வியப்புக்கான ஒலியீடாகப் பயன்படுத்த தொடங்கினான். ( இந் நிலையுண்மையின் பதிவுச் சாறம் தொல்காப்பி
எழுத்ததிகாரத்தின் மொழி மரபுப் பகுதியில் உள்ள "அகர இகரம்
ஐகாரம் ஆகும்'' என்னும் 21-ஆம் நூற்பாவில் உட்பொதிந்து தொக்கி நிற்பதை நுண்ணிதின் நோக்கின் தெளியவுணரலாம்!... )

''ஊ'' என்னுமாறு ஒலியிட்டு வந்தான் - அதனை ''ஓ" என்றவாறு திசைவித்து எளிமைப் படுத்திக் கொண்டான்!

ஆ-ஈ-ஊ-ஓ - ( அய் > ) ஐ என்றவாறான உணர்ச்சி யொலிகளைப் பயன்படுத்தித் - தன்னின் இன்பவுணர்ச்சிகளை அல்லது துன்பவுணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அவற்றின் வழிப் பழக்க மாக்கிக் கொண்டே மொழியைத் தொடங்கினான்.

"ஈ" என்னும் ஒலியிட்டு '"ஏ'' என்றவாறு அதனைத் திசை வித்து எளிமையாக்கிக் கொண்டான்! "ஏ" என்பதனை ஏ+ஈ>ஏயி>ஏய் என்றவாறு நீட்டியொலித்தமையில் சேய்மையிலிருந்த தன் தொடர்புடையாளனை அல்லது தொடர்புடையாளை எளிதாகவும்
அதே நேரத்தில் வலிதாகவும் விளித்து அழைக்கத் தொடங்கினான்.

"ஓ" என்றொலித்து விளிக்கத் தொடங்கியவன் பின்னர் ஓ + ஈ > ஓயி > ஓய் என்றவாறு நீட்டியொலிக்கப் பயின்றான் ! அதனால் எளிதே விளிக்கத் தெரிந்தான்!

உணர்ச்சியொலிகளையும் - விளியொலிகளையும் பயன்படுத்தி வருகையின் வளர்ச்சி வழியில் பிற உயிரிகளிட்ட ஒலியீடுகளைப் போலவே தானும் ஒலித்துப் பார்த்துப் பயின்று -அதனடிப்படையிலான பெயர்களால் அவற்றைச் சுட்டவும் படிப்படியே தேர்ந்தான்!

(ஒ நோ : கா கா> காக்கா >காக்கை,

மா> மா +டு மாடு. குர் > குர் + அங்கு > குரங்கு )

ஆ,ஈ,ஊ என்னும் இயற்கையாக இயன்ற இந்-நெட்டுயிர்ப் பொலிகளைக் கொண்டே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தொடங்கி - இவ்வுணர்ச்சி வெளிப்பாட்டுக்குப் பயன்பெற்ற ஒலிகளையே சுட்டு வதற்குமுரிய ஒலிகளாக மாத்தன் பயன்படுத்தத் தொடங்கினான்.

''ஆ'' என்னும் ஒலியைச் சேய்மையைச் சுட்டுவதற்கென்று பயன்படுத்தினான். வாயை அகலித்து விரித்துத் திறந்து வெளிப் படுத்தியதால் உண்டாகிய ஆகார ஒலியைச் சேய்மைக்கும் - வாயைப் பக்கவாட்டுகளில் இழுத்தாற்போலும் இடவலப்பக்கத்திற்குச் சரிசமனாக வலித்து நின்று ஒலித்த ஈகார ஒலியைத் தனக்கு மிக அண்மைக்கும்.வாயிதழ்களை முன்னுக்குக் கூட்டிக் குவித்து முயற்சியோடு ஒலித்த ஊகார ஒலியைத் தனக்கு முன்மைக்கும் ஆகப் பயன்படுத்திச் சுட்டத் தொடங்கினான்.

ஆ,ஈ,ஊ என்னும் நெட்டொலிகளான முந்நிலைச் சுட்டு களே - முதற்கண் இம் மொழியில் சுட்டொலிகள். இவற்றின் பதன்பட்ட குறுக்கமே அ,இ,உ என்பன. இவ்வுண்மையை 'அ இ உ -அம் மூன்றும் சுட்டு '' என்றவாறு தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் நூல் மரபுப் பகுதியிலுள்ள 31- ஆம் நூற்பா சுட்டுகையில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளின் மொழியியல் தொடர்ச்சிப்பாடு கலங்கல் இல்லாமல் துலங்கி நிற்பது வியப்பானதாகும்.

இச் சுட்டொலிகளின் தோற்றமே "தமிழ்'' என்றும் மொழியைக் கருப்பெற வைத்தது ! பிறகுதான் செயற்கை மொழியாக (Artificial language ) வளங் கொழிக்கத் தொடங்கியது.

கருத்துப் பெருக்கமானது- ஒன்றையொன்று பற்றிப் படிப்படி யாகவே திகழும் தன்மைப் போக்கு உடையதாகும்.

ஆய்!

ஆ + ஈ > ஆஈ > ஆயீ> ஆயி>ஆய்.

இயற்கையான உணர்ச்சியொலிகளில் முதலாவதானதும் இரண்டாவதானதும் ஆன- நெட்டுயீர்ப்பொலிகளாகிய "ஆ" என்பதையும் ''ஈ'" என்பதையும் தொடர்ந்தொலிக்கக் கற்று ஆஈ> ஆயி > ஆய் என்றவாறு வளர்ச்சிப்பட்டுவிட்ட அவ் வொலியால்- தன்னை ஈன்ற தாயை முதற்கண்ணும் - அவள்வழித் தெரிந்துகொண்ட தன்னை ஈன்புறச் செய்த தந்தையை இரண்டாங்கண்ணும் விளிக்கவும் - பின்னர் சுட்டவும் மாந்தன் தெளிந்தமை சொல்லியல் வரலாற்றில் முதலாந்தரத்தன !

''ஆயி'' என்பதுவும் ''ஆய்'' என்பதுவும் முற்பொழுதுகளில் விளிநிலைகளிலேயே இருந்து - பிற்பாடு பெயர்நிலைகள் பெற்றுள்ளன !

''ஆய்'' என்னும் அவ் விளிச் சொல்லைத் தாய்க்கும் தந்தைக்கும் (ஆண்பாற்கும் பெண்பாற்கும்-) பொதுவாகச் சுட்டி வந்த உண்மை நிலை'' ஆய் '' என்பதுவே - தாயைக் குறித்த சொல்லாகவும்- பெண் பாலின் எதிர் பாலதாகிய ஆண்பாற் குறித்துத் தந்தைக்குரிய சொல்லாகவும் வழங்கியுள்ள நிலைகளாற் புலனாகின்றது!

'ஆய்'' - என்னும் கடையெழு வள்ளல்களில் ஒருவனுக்குரிய இயற்பெயரே இதனை மெய்ப்பிக்கப் போதுவதாகும். ''ஆய்'' என்னும் அரசவள்ளல் "ஆய் அண்டிரன் " என்னும் பெயராலும் குறிக்கப் பெற்றுள்ளான். (காண்க: " ஆர்வ நன்மொழி ஆயும்'' (சிறுபாண்: 99)  ''ஆய் எயினன்'' என்னும் பெயரிய குறுநில மன்னன் ஒருவனும் இத் தமிழகத்தில் ஆட்சி செலுத்தியுள்ளான். ஆக, ''ஆய்'' என்னும் பெயரை ஆண்பாற் பெயராகவும் மேற்கொண்டு வந்த வழக்கமானது இம்மொழி யுள் உள்ளமை பெறப்படுகின்றது !

(சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களின் பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி)

No comments:

Post a Comment