இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 13 May 2021

தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்

தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்.

திருக்குறளில் 'கடவுள்' என்னும் சொல்லோ, 'வாழ்த்து' என்னும் சொல்லோ திருக்குறள் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தில் இல்லை. திருக்குறள் நூலிலும் கடவுள் என்னும் பெயர் எங்குமே இடம்பெறவில்லை. அதனால் கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகார பெயர் பொருந்தாது என்று எண்ணியவர்கள் பலர். மாற்றி பெயரிட்டு உரை கண்டவர்கள் பலர். பின்னர் அதை மாற்றிக் கொண்டவர்களும் பலர். இதை திருக்குறள் சார்ந்த பல்வேறு உரையாசிரியர்களது  நூலைப் படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ள முடிகிறது.

வாழ்க்கைத் துணைநலத்தின் இறுதிக் குறள் "மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு"  என்றும், இது அடுத்த அதிகாரத்தின் தொடக்கமான   "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற" என்றும் அமைந்திருக்கவும் அதைக் கருத்தில் கொள்ளாமல் மக்கட்பேறு என்ற அதிகாரத்தை மாற்றி புதல்வரைப் பெறுதல் என்று உரைகண்டாரும் உண்டு. அது வள்ளுவருடைய உள்ளமாகுமா? என்றால் ஆகாது. அதேபோல் அவாவறுத்தல் என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறளான "ஆரா இயற்கை அவாநீப்பின், அந்நிலையே பேரா இயற்கை தரும்"  என்றிருக்கவும் அடுத்த அதிகாரப் பொருளை "உலகத்து இயற்கை"  என தெரிவித்திருந்தும் 'ஊழ்' என்பதற்கு வேறு பொருள் கூறி பொருள்மயக்கம் செய்தவர் பலர்.  இது எப்படி வள்ளுவர் உள்ளமாகும்? ஆகாது. இவை அதிகாரப் பெயர் மயக்கும், குறள் பொருள் மயக்கும் ஆகியவை.  "கடவுள் வாழ்த்து" என்பது தொல்காப்பியர் வழியில் வள்ளுவர் அமைத்துக் கொண்டது என்பது தெளிவாதலால் அப் பெயர் அவ்வாறே கொல்லப்பட்ட தாம். ஏடுகளிலும் கடவுள் வாழ்த்து என்றே இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

கடவுள் என்பதன் பொருள் தெளிய வைக்க அமைந்ததொரு சொல் "இயவுள்" என்பது. '  பெரும் பெயர் இயவுள்' என்பது 'முருகியற்கை' வழி, முழுமுதற் பெயர் குறிப்பதாகும்.
இயக்கு ஆற்றல் - உலகத்தை இயல்பாக இயங்க செய்யும் ஆற்றல் எதுவோ அதற்கு  இயவுள்  என்று பெயர். வீடு விட்டு வீடு கடக்க வைத்த இடைவழி,  கடவு எனப்படும்.  அது அறிவியல் வளத்தால் நாடு விட்டு நாடு கடக்கவும்,  அண்டம் விட்டு அண்டம் கடக்கவும் ஆகியமையால் அதுவும் 'கடவு'  ஆனது.  அதனால் நாடு விட்டு நாடு கடந்து செல்ல வாங்கிய ஒப்புகைச் சீட்டு 'கடவுச்சீட்டு' என இந்நாளில் கலைச்சொல்லாக்கம் பெற்றது.  கடவு+ள் =  கடவுள் ஆனது.  கடவு= செலவு;  இயக்கம். இந்த இயக்க ஆற்றல் எங்கே உள்ளது? என்று கேட்டால்  அவ்வாற்றல்  எங்கும் உள்ளது என்பதை விளக்கவே 'இறை' என்ற சொல்லாட்சி பயன்படுத்தப் பட்டது. இறைவன் என்பது வள்ளுவ ஆட்சி.

இறை

எங்கும் பரந்து கிடக்கின்ற பொருள்களைப் பார்த்து இறைந்து
கிடக்கின்றன என்று குறிப்பிடுவோம். இறை என்பதற்கு, இங்குப்
பரந்து என்ற பொருள். பொதுவாக ‘இறை’ என்றால் தங்குதல்
அல்லது எங்கும் நிறைதல் (immanence) எனும் பொருள்கள்
உண்டு. எனவே, அங்கு, இங்கு எனாதபடி எங்கும் நிறைந்த
ஒரு பரம்பொருளை, இறை அல்லது இறைவன் என்று சுட்டுவர்.
மேலும் ‘இறைமை’ என்பதற்குத் தலைமை, தெய்வத்தன்மை,
அரசாட்சி, கடவுள், பரப்பு என்ற பொருள்களும் உள்ளன.
இறைமை என்பது பொதுவாகச் சமயங்களைப் பொறுத்த
வரையில் முழுமுதற் கடவுளையே குறிக்கும். இறைவனை ஆண், பெண் என்று நமது முன்னோர் உருவகப் படுத்தியுள்ளனர். இறைவன் - ஆண், இறைவி-பெண்.

இவ்வகையிலேயே திருக்குறளில் முதல் அதிகாரப்  பெயர் இறைவழிபாடு, இறைவணக்கம், கடவுள் வாழ்த்து என்ற வகையில் அமைகின்றது. 
'அகரம்'  தமிழ் மொழியின் முதல் எழுத்து, என்று ஒல்காப் புகழ்  தொல்காப்பியனாரும் தனது தொல்காப்பியத்தில் "எழுத்தெனப் படுவ
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப"  என்று தம் நூலை தொடங்கினார். தொல்காப்பியர் வகுத்த நெறியில் வள்ளுவனாரும் 'அகர முதல...' எனத் தொடங்கி  'முயங்கப் பெறின்' எனத் தம் நூலான திருக்குறளை முடித்தார்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.

No comments:

Post a Comment