அன்பும் அறனும் துணையாய்க் கொண்டு
பண்பும் பயனும் பெருக வாழ்க!
ஆற்றின் ஒழுக்கி அறவழி போற்றி
நோற்பார் நோன்பை வென்று வாழ்க!
இன்சொல் தன்னை நாளும் பேசி
இல்லறம் சிறக்க இனிதே வாழ்க!
ஈத்து உவக்கும் இன்பம் அறிந்து
ஈந்து மகிழ்ந்து இசையாய் வாழ்க!
உடலும் உயிரும் ஒன்றியே வாழும்
உண்மைத் தன்மை உணர்ந்து வாழ்க!
ஊருணி நீர்போல் யாவரும் பயனுற
உற்றார் உறவினர் சூழ்ந்திட வாழ்க!
என்புடன் சதையது இணைதல் போல
என்றும் நீவிர் இன்புடன் வாழ்க!
ஏரும் போரும் எம்குலத் தொழிலென
ஏரென நடந்து பீடுடன் வாழ்க!
ஒளியார் முன்னே ஒள்ளிய ராகி
ஒளியாய் ஒப்பில் மணியாய் வாழ்க!
ஓய்தல் இன்றி ஆய்தல் ஆய்ந்து
ஓதுதல் செய்து உயர்ந்தே வாழ்க!
மங்கல மனையறம் சிறக்க வாழ்க!
மாநிலம் எல்லாம் போற்றிட வாழ்க!
வள்ளுவன் குறளாய் வான்புகழ் தமிழாய்
வையம் தன்னில் வாழ்வாங் குவாழ்க!
வாழ்த்துகளுடன்
ச.ந.இளங்குமரன் - நிறுவனர்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.
No comments:
Post a Comment