இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 4 February 2022

அற்றைத் திங்கள்

அற்றைத் திங்கள்... 
(கடந்த ஆண்டு இதே நாளில்)

நேற்று இரவு ஆழ்ந்த படிப்பில் என்னையே மறந்து புத்தகத்தில் புகைந்து கொண்டிருந்த நேரம்.  தம்பி என்று அழைத்தவாறு தன்னுடைய மெல்லிய கைளால் என் தோளைத் தொட்டார் அவர். அந்தக் குரல் எனக்கு மிக நெருங்கிய தொடர்புடைய குரல்.

திடுக்கிட்டுத் திரும்பினேன்.
விளக்கின் ஒளி மங்கும் அளவிற்கு வெள்ளை வேட்டி சட்டையோடு மெல்லிய புண்ணகை தவழ எமது ஆசான் இளங்குமரனார் நின்று கொண்டிருந்தார். "ஆள்வருவது கூடத் தெரியாமல் அப்படி என்ன படிக்கிறீர்கள்" என்ற ஐயாவின் குரலைக் கேட்டவாறு அவரை கால்களில் வீழ்ந்து வணங்கினேன். மெதுவாகக் குனிந்து என்னை தூக்கி நிறுத்தினார். என் தோளைத் தொடும் அளவிற்கு நான் என்னையே மறந்து படித்துக்கொண்டிருந்த புத்தகம் ஐயா அவர்கள் எழுதிய "தமிழர் வாழ்வியல் இலக்கணம்" என்பதைச் சொன்னேன்.

இது தவச்சாலையில் கொடுத்தது தானே என்று என்று கேட்டார். ஆமாம் ஐயா என்று சொல்லிக்கொண்டே ஐயா அவர்களை இருக்கையில் அமர வைத்து பின்பு நானும் அமர்ந்து கொண்டேன். அந்த நூலில் எனக்கு இருக்கின்ற ஐயப்பாடுகளை நேரடியாகவே ஐயாவிடம் கேட்பது என்று கேட்கத் தொடங்கினேன். சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். 

பின்பு சாகரம் மொழிமுதல் வராது என்று இன்றும் பல அறிஞர்கள் சண்டை போடுகிறார்கள் ஐயா இதற்கு எப்போது தீர்ப்பு வரும்? என்று கேட்டேன். அவர் சொன்னார் சகரம் மொழி முதல் எழுத்தாக வரும். தொல்காப்பியத்தை முறையாகப் படிக்கும் வரை இந்தச் சண்டை நீடித்துக் கொண்டே தான் இருக்கும் என்று சொன்னார். மொழி முதல் வரும் என்பதற்கு சான்று என்னய்யா என்று கேட்க அந்தக் காலத்தில் அவர்கள் சாப்பிடாமல் இருந்திருப்பார்களா? சட்டியில்லாமல், சமைத்து இருப்பார்களா என்று அடுக்கினார். அப்போதுதான் தொல்காப்பிய நுட்பத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 

அது இருக்கட்டும் இன்றைக்கு என்ன நாள் என்றார். 02-02-2022 என்றேன். நாளை என்று கேட்டார்... 03-02-2022 என்றேன். ஆம் நான் 30 ல் பிறந்தவன். நீங்கள் 3 இல் பிறந்தவர். நான் 1 ஆம் மாதம், நீங்கள் 2 ஆம் மாதம். கடந்த ஆண்டு நீங்களும் என் மகளும் என் இல்லம் தேடி நேரில் வந்து வாழ்த்து பெற்றீர்கள். இன்று நான் உங்கள் இல்லம் தேடி வந்து வாழ்த்துகிறேன் என்றார். நுண்மாண் நுழைபுலத்தராய் நீடுவாழ்க என்று வாழ்த்தினர். 

காலில் வீழ்ந்து வணங்கினேன். எழுந்தேன் ஐயாவைக் காணவில்லை. திடுக்கிட்டு விழித்தேன்... எல்லாம் கனவு நாளைய என் பிறந்த நாளுக்காய் இன்று வந்து வாழ்த்திய என் ஆசான் செந்தமிழ் அந்தணர் அவர்களை எண்ணி விழிகள் கசிந்தன. கடந்த ஆண்டு அவர் என்னிடம் சொன்ன திருக்குறளை இன்று நினைத்துப் பார்க்கிறேன்.

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு"

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்

No comments:

Post a Comment