இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 10 February 2022

நூல் மதிப்புரை - மேடைப் பூக்கள் - இரா.மணிகண்டன்

நூல் : மேடைப்பூக்கள்
நூலாசிரியர் : பேரா.பத்மினிபாலா
வையைப் பதிப்பகம் தேனி.
விலை - 120

வையைப் பதிப்பகத்தின் வெளியீடான முனைவர் பேராசிரியர் பத்மினிபாலா அவர்களது மேடைப்பூக்கள் கவிதை நூலைப் படித்தேன். அத்தனை கவிதைகளும் மிக அருமை. 

ஒவ்வொரு கவிதையையும் படிக்க படிக்க புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் தொடர்ந்து என்னை இழுத்துச் சென்றது.

சில கவிதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தேன். அதன் கருத்தாழத்தில் தேய்ந்து போனேன். சில சமூகம் சார்ந்த கவிதைகளைப் படித்தவுடன் நரம்புகள் முறுக்கேறத் தொடங்கி விட்டன. சில கவிதைகள் நெஞ்சை நெருடின. இப்படியான பல கவிதைகளில் உழவன் குறித்த ஒரு கவிதையைப் பதிவு செய்கிறேன். 

உழவன்

உயிர்க் குலத்தின் பசியினைப் போக்க பயிர்களை நெய்யும் பரம்பொருள் உழவன்!

காலுக்குச் செருப்பாய்க் கடும்வெயில் அணிவான்! மேலுக்கு உடையாய்க் காற்றினை உடுப்பான்!

வேளைக்குச் சோறு உண்பதைத் தவிர்ப்பான்! வேண்டிய எல்லாம் உலகுக்குக் கொடுப்பான்!

நாளெலாம் உழைப்பான் நலிந்து கிடப்பான் ! நாட்டின் நலிவைப் போக்கி நிமிர்வான் !

வீட்டில் வறுமைத் தாண்டவம் ஆடும் நாடும் ஏடும் அவன்புகழ் பாடும்!

ஏரின் பின்னால் உலகம் சென்றும் ஏற்றம் மட்டும் அவனுக் கில்லை!

உழவன் மட்டும் உழைக்க மறந்தால் உலகம் யாவும் பசியால் வாடும்!

மேலும்...
கருவின் உருவம் பெண்ணெனத் தெரிந்தால்..
எனத்தொடங்கும் வரி முதற்கொண்டு 
மணவரை தண்ணில் 
தலையது கவிழும்வரை...

இக்கவிதையில் பெண்களைப் பேசுவதாக எண்ணி ஆண்களையே கண்ணாடி முன் நிறுத்துகிறார். ஆண்களின் பருவ முகங்களை மேடை போட்டு காண்பிக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன்னை உணர்வதற்கு வாய்ப்பாக வரிகளை அமைத்திருக்கிறார். 

மனித சமூகத்தில் பாதிக்கும் மேலாய் இருக்கின்ற பெண்களின் நிலையை ஆண் வர்க்கம் உணர மறுக்கின்ற உண்மையை உரக்கச் சொல்கிறார் கவிஞர்.

மேடைப்பூக்கள் என்னும் இந்தக் கவிதை நூலில் சமூக நிலையை எண்ணியே தனது எண்ணங்களை, செயல்பாடுகளை கவிதையாக  வடித்துள்ள சகோதரி கவிஞர் பத்மினிபாலா அவர்களுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துகள். 

இந்த அருமையான நூலினை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

நூல் வேண்டுவோர் பதிப்பகத்தாரைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளுங்கள். 98423 70792

சிறப்பான கவிதைகளுக்காக பேராசிரியர் பத்மினிபாலா அம்மா அவர்களுக்கும், அழகிய முறையில் நூலாக்கம் செய்த வையைப் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி 
கவிஞர் இரா.மணிகண்டன்
சோழா பைனான்சியல் சர்வீசஸ் மையம் தேனி.
பேச 90802 27258

No comments:

Post a Comment