இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 30 October 2021

தேவர் சமயம் சன்மார்க்கம்

தேவர் சமயம் சன்மார்க்கம்...!

ஈரத் துறவி வள்ளல் பெருமான்!
வீரத் துறவி விவேகா நந்தர்!
இரண்டும் ஒன்றாய் இணைந்த உருவம் !
இறவாப் புகழுடன் வாழும் தெய்வம் !

திருக்குறள் தன்னில் தோய்ந்தவர் தேவர் !
அருட்பா வாழ்வு வாழ்ந்தவர் தேவர்!
கருப்படு பொருளை உருப்பெற வைக்கும் 
அறநெறி அண்ணல் பசும்பொன் தேவர்!

வள்ளல் பெருமான் வழியில் நின்ற
வெள்ளுடை வேந்தர் தேவர் பெருமான் !
உள்ளம் அனிச்ச மலரினும் மெல்லிது !
வள்ளல் தன்மையோ வானினும் உயர்ந்தது!

காவி உடையினை விரும்பிய தில்லை !
காவிக் கொள்கையை ஏற்றவர் இல்லை !
நாவலந் தீவினைத் தாண்டிய மதத்தையும் !
நாவால் பழித்து நயந்தவர் இல்லை !

அறச்செயல் அற்ற அரசியல் வாதிகள் !
திறம்படத் திரித்த பொய்களி னாலே !
அரசியல் களத்தில் சூழ்ச்சிகள் அறியா !
அறச்செயல் மறவர் பழிகளைச் சுமந்தார் !

தேவரை மதத்தில் அடைப்பது தவறு !
தேவரைச் சாதியில் அடைப்பதும் தவறு !
தேவர் நமது தேசியத் தலைவர்!
தேவர் மக்கள் அனைவருக்கும் பொதுவர் !

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

No comments:

Post a Comment