இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 15 October 2021

கார் நாற்பது மூலமும் உரையும் - பதினெண்கீழ்க்கணக்கு ச.ந.இளங்குமரன்

தோழி பருவங்காட்டி தலைமகளை வற்புறுத்தியது

4) ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன
பாடு வண்டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து.

கூத்தாடும் மகளிர் போல மயில்க அழகுபெற ஆடுகின்றன, காடுகள் அழகுபெறும் படியாக கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கின. பாடும் வண்டுகள் மலர்களின் தாதுக்களை ஊதி மகிழ்ந்தன. ஆகவே மூங்கிலையொத்த தோள்களை உடையவளே இந்தக் கார்காலப் பருவமானது உன்னை வாட்டுகின்ற பசலை நோய்க்கு மருந்தாகும்.


5) இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாப் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு.

அம்புபோன்ற கூர்மையான கண்களை உடையவளே, பவழமானது சிதறிக் கிடப்பதுபோல் காடெங்கும் இந்திரகோபப் பூச்சிகள் பரந்து கிடக்கின்றன. தக்கார்க்கு ஈந்துவாழும் தகைசான்ற வாழ்வினுக்காய் பொருள் தேடிச் சென்ற நம் தலைவர் இக்காலத்தே வருவதாய்ச் சொல்லிச் சென்றது பொய்யல்ல மெய்.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

No comments:

Post a Comment