இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 17 October 2021

கார் நாற்பது மூலமும் உரையும் ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது 
(மூலமும் உரையும்)

6) தொடியிட வாற்றா தொலைந்ததோள் நோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பொருள் : மா வடுவின் நடுவே பிளந்தாற் போன்ற அகன்ற கண்களை உடையவளே, நெடிய வழியில் பொருள் தேடிச் சென்றிருக்கும் நம் தலைவரை இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செல்க என  வலியுறுத்தி, கடுமையாய் வானம் இடித்து முழங்கி அறிவித்திருக்கிறது. ஆதலால் தலைவனின் பிரிவால் வளையலிட ஆற்றாத உன் மெலிந்த தோள்களைப் பார்த்து  வருந்துதல் வேண்டாம்.

7) நச்சியார்க் கீதலும் நண்ணார்த் தெறுதலுந் 
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளிரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல 
எச்சாரு மின்னு மழை.

தளிர்போலும் இயல்புடையவளே, தம்மை விரும்பி வந்தவருக்குக் கொடுத்து உதவவும், தம்மை விரும்பாத பகைவரின் செருக்கை அழிக்கவும், தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவுமான பொருளின் தன்மையறிந்து, அவற்றைத் தேடிச் சென்றிருக்கும் நமது தலைவரை மறப்பில்லாத புகழை உடைய வேள்வித் தீயைப் போல, எல்லாப் பக்கமும் மின்னி வானமானது நம்மிடம் கொண்டுவரும்.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

No comments:

Post a Comment