இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 9 July 2024

தொலைபேசியா? தொலைப்பேசியா?

5- தொலைபேசியா? தொலைப்பேசியா?

வானும் இருந்தது; ஒலியும் இருந்தது; வானொலி கிடைத்தது.

தொலையும் இருந்தது; காட்சியும் இருந்தது; தொலைக்காட்சியாயது.

தொலையொடு காட்சி இணையத் தொலைக் காட்சி ஆயது என்றால், தொலையொடு பேசி இணையத் தொலைப்பேசி தானே ஆக வேண்டும். தொலைபேசி என்றால் தொலைந்து போன, தொலைந்து போகிற, தொலைந்து போகும் பேசி என வினைத் தொகையாக அல்லவோ ஆகிவிடும்.

தொலைவுக்குப் பேசுதல், தொலைவில் இருந்து பேசுதல் ஆகாதே! முதற்கண் இதனை எழுதிப் பரப்பி யவர் பிழைபடப் பரப்பி விட்டார்; பெருக வழங்கிவிட்டது எழுத்திலும் பிழையாக நின்று விட்டது. எழுத்தில் இருப்பது இத்தனை அத்தனையா?

'பொது தொலை பேசி' என்பது சந்து பொந்து களில் எல்லாம் சிற்றூர் பேரூர் மூலை முடுக்கு எல்லாம் இடம் பெற்று விட்டதே. இம்முச்சொல் இணைப்பில் இரு சந்திப் பிழைகள் உள்ளனவே!

பொதுவானது என்னும் பொருள் தர வேண்டும். என்றால் 'பொதுத் தொலைப்பேசி' என்றல்லவா இருக்க வேண்டும்.

'பொது' தொலைப்பேசி என்றால் பொதுக்கப் பட்ட, பொதுக்கப்படுகின்ற, பொதுக்கப்படும் தொலைப்பேசி என்றல்லவா ஆகும். பொதுத்தல் துளையிடுதல். பொத்து வடிதல் வழக்கில் உண்டே.

பல்கால் பழகிவிட்டால், அதிலும் பெரியவர்கள் வழங்கிவிட்டால் அதுவே 'சரி' என்னும் எண்ணத்தை யும் ஊட்டிவிடுமே! ஆதலால் சீரான கலைச் சொல்லை உருவாக்குதலோடு சீரான வடிவிலும் தந்து பரப்புதல் வேண்டும் என்பது தெளிவாம்.

(செந்தமிழ் அந்தணரின் செழுந்தமிழ்)
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.

No comments:

Post a Comment