இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 14 July 2024

சுட்டொலிகள்

சுட்டொலிகள்

மூன்று இலக்கம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் முதலாவது தன்னுடைய கைகால் அசைவுகளையும், கண் அசைவினையும், முகக் குறிப்பையும் கருத்து வெளியிடும் வாயில்களாகக் கொண்டிருந்தான். பின்பு வாய்ச்சைகை காட்டும் முறையில் சில ஒலிகளைப் பிறப்பித்தான்.

சேய்மைச் சுட்டாக வாயைப் படுக்கையாய் அகலித்தபோது 'ஆ' எனும் ஒலியும்,அண்மைச் சுட்டாக வாயைக் கீழ்நோக்கி விரித்த போது 'ஈ' எனும் ஒலியும், முன்மைச் சுட்டாக வாயை முன் நோக்கிக் குவித்த போது 'ஊ' எனும் ஒலியும், உயரச்சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது 'ஓ' என்னும் ஒலியும் பிறந்தன இவை வாய்ச்சைகையொலிகள்.

இவ்வைந்து சுட்டுகளையும் ஒலிப்பதற்கேற்ற வாய் நிலைகள் வெவ்வேறு. ஒன்றுக்குரிய வாய்நிலையில் வேறொன்றை வேறொரு ஒலியை ஒலிக்க முடியாது.  'ஓ' எனும் நிலையில் மட்டும் 'ஆ' எனும் ஒலியைச் சிறிது ஒலிக்கலாம். இதனை நீங்கள் ஒலித்துப் பார்க்கலாம்.

பின்னர், வயிறார வுண்டபின் அடிவயிற்றிலிருந்து  மேல்நோக்கி யெழும் காற்று ஏகார வடிவாய் வெளிப்பட 'ஏ' என்னும் ஒலி எழுகைச்சுட்டாகக் கொள்ளப்பட்டது. உண்டபின் வயிற்றிலிருந்து எழும் ஒலியை ஏப்பம் என்று தமிழிலும் eructa- tion என்று ஆங்கிலத்திலும் ஏகார எகர முதற்சொல்லாகக் கூறுதல் காண்க. ஏப்பம் விடும்போதே சிலர் ஏவ் என்றும் சிலர் ஏப்பம் என்றும் ஒலிப்பது வழக்கம்.

ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்னும் ஐந்து தனியுயிர் நெடில்களும் குறுகி முறையே அ, இ, உ,எ,ஒ என்னும் ஐந்து தனியுயிர்க் குறில்கள் தோன்றின. பின்னர், அகரத்தொடு இகர உகரங்கள் புணர்ந்து முறையே ஐ ஒள என்னும் உயிர்ப் புணரொலிகள் தோன்றின.

இங்ஙனம் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் தனியொலிகளான ஐந்நெடில் களும் சுட்டொலிகளாக முதலாவது தோன்றின. இவ்வொலிகளே பின்பு எழுத்துவடிவம் பெற்றன. 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

No comments:

Post a Comment