காதலாகி....
அவன்...
சித்திரமே செங்கரும்பே சித்தமதைத் தின்றவளே
முத்துமணி ரத்தினமே முத்தத்தால் வென்றவளே
தத்தையென நித்தநித்தம் தந்திட்ட முத்தமெலாம்
மொத்தமாய் தந்திடுவேன் வா!
அவள்...
கண்ணங் கருப்பழகா கட்டிவெல்லப் பேச்சழகா
எண்ணம் நிறைந்தவனே என்னுயிராய் ஆனவனே
எண்ணிக்கை இல்லாமால் ஏந்திழைநான் தந்ததெல்லாம்
என்னுயிரே உன்றனுக்கே தான்!
அவன்...
கூடிக் குலவிடுவோம் கொஞ்சுமொழி பேசிடுவோம்
சோடிப் புறவெனவே சொர்க்கவாழ்வு வாழ்ந்திடுவோம்
பாடிப் பறந்திடுவோம் பாரில் உலவிடுவோம்
வாடி வசந்தம்நீ வா!
அவள்
உலவும் நிலவுக்கோ உற்றவளாம் அல்லி
மலர்ந்திடும் தாமரைக்கோ மன்னவனாம் சூரியன்
நிலவும் கதிரும் எனக்குநீ அத்தான்
பொழுதெல்லாம் நானுனக்குப் பொன்!
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment