இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 5 May 2022

மாத்திரை

குறில், நெடில், மாத்திரை.

3 குற்றெழுத்து

அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப.

தெளிவுரை : 

அவற்றுள் - முன்னர் சொன்ன முப்பது எழுத்துகளில் உயிரெழுத்து என்பவற்றுள்,  அ, இ, உ, எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும் - அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துக்களும், ஓரளபு இசைக்கும் -  ஒரு மாத்திரை அளவாக ஒலிக்கும், குற்றெழுத்து என்ப -  குறில் எழுத்து அல்லது குற்றெழுத்து என்று தொல்லாசிரியர் சொல்வர்.

விளக்கம்

மாத்திரை என்பது எழுத்துகள் ஒலிக்கப்படும் கால அளவு. இதற்கான அளவுகோல்கள், கண் இமைக்கும் பொழுதும், கைநொடிப்பொழுதும் ஆகும். உயிர் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை வைத்து குறில், நெடில் அதாவது குற்றெழுத்து, நெட்டெழுத்து என இருவகையாகப் பகுத்துள்ளனர் நம் முன்னோர்.

 4. நெட்டெழுத்து
 
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஒள என்னும் அப்பாலேழும் ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

தெளிவுரை : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் - ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள ஆகிய, அப்பால் ஏழும் - ஏழு எழுதுகளும், ஈரளபு இசைக்கும் -  இரண்டு மாத்திரை அளவின தாக ஒலிக்கும் நெட்டெழுத்துகள் என்று முன்னாசிரியர் மொழிவர். 

விளக்கம் : எழுத்துகளை குறில், நெடில் என இரண்டாகப் பகுத்த முன்னாசிரியர் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை வைத்து குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை எனவும் அளவுகோல வைத்தார்.

ச..ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி, நாகலாபுரம்.

No comments:

Post a Comment