சார்பெழுத்துக்கள்
2.
அவைதாம்
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.
தெளிவுரை :
அவைதாம் - சார்பு எழுத்துகள் மூன்று என்று சொல்லப்பட்ட அவை
குற்றியல் இகரம் - குறுகிய ஒலியை உடைய இகரமும்
குற்றியல் உகரம் - குறுகிய ஒலியை உடைய உகரமும்
ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் - ஆய்தம் என்று இலக்கணம் ஆய்ந்த புலவர் பெருமக்களால் ஆராய்ந்து வழங்கப்பட்ட மூன்று புள்ளி வடிவினதாகியதும் ஆகிய மூன்றும்
எழுத்து ஓர் அன்ன - எழுத்தோடு ஒப்ப அமைந்ததாம்.
பொருள் : சார்ந்துவரும் மரபை உடைய எழுத்து சார்பெழுத்து என்று முன் நூற்பாவில் சொல்லப்பட்ட அவை, குற்றியலிகரம். குற்றியலுகரம் ஆய்தம் என்றழைக்கப்படும் மூன்று கூறாகிய புள்ளி ஆகிய மூன்றும் ஆகும் இவை முன்னர் கூறிய முப்பது எழுத்துக்களோடு ஒரு தன்மையாக விளங்கும்.
விளக்கம் (1)
: சார்பெழுத்துக்கள் என்பவை தனித்தியங்கும் தன்மை இல்லாதவை. பிற எழுத்துக்களைச் சார்ந்தே அவை இயங்கும். அதாவது தம்முடைய ஒலிப்புக் கால அளவாகிய மாத்திரையை இழந்து, முந்தைய எழுத்தின் சார்பாக நின்று, குறுகி ஒலிக்கும். இகரம் குறுகி ஒலிப்பது, குற்றியலிகரம். ஆய்தம், தனித்தியங்காது. அது அஃகி, எஃகு, கஃறு போன்று பிறவற்றைச் சார்ந்து ஒலிக்கும். எனவே இதுவும் சார்பெழுத்து ஆயிற்று.
தொல்காப்பியர் காலத்தில் மூன்று புள்ளிகளையிட்டு எழுதும் வழக்கத்தை 'ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி (ஃ) வடிவிற்றென்பது' என்று நச்சினார்க் கினியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வடிவம் நச்சினார்க்கினியர் காலத்திலேயே மாறிவிட்டது. இதனை 'இக்காலத்தார் நடுவு வாங்கி இட்டெழுதுப' எனும் அவர் கூற்று உறுதிசெய்யும். இதற்கேற்ப 8 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட காசக்குடிச் செப்பேட்டில் வெஃகா என்ற சொல் 'வெ÷கா' என்று பொறிக்கப் பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment