கோடை வெயிலில்
குளிர்ந்த நிழல்தரும்
கடவுளை வழிபடப்
பூக்களும் தரும்
கடும்பசிக்கும் தரும்
உணவும் நீரும்
அம்மணம் மறைக்கும்
ஆடை தன்னை
அழகாய் நெய்ய
நூலைத் தரும்
கூடிநாம் வாழ்திடக்
கூடுதரும்
குழந்தை நடக்க
வண்டி தரும்
பிணியைப் போக்க
மருந்து தரும்
பிள்ளை தூங்க
தொட்டில் தரும்
தள்ளாடு வோர்க்கும்
தருமே ஊன்றுகோல்
காற்றில் மாசைக்
கணக்காய்க் களையும்
கைகளை அசைத்து
மழையை அழைக்கும்
எத்தனை பயன்கள்
மரத்தால் விளைந்தன
மறந்தான் மனிதன்
மரத்தின் பயனை
மணந்தான் மனிதன்
மரணம் தன்னை
இயற்கைத் தாயின்
இதயம் தன்னை
வெட்டிச் சிதைக்கும்
வேடிக்கை மனிதா
சிதைவது மரங்களல்ல
உனது வாழ்க்கை...!
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment