தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் வழிபாடு நடத்தலாம் என்று ஆணை வழங்கிப் பணி நியமனமும் வழஙமிகிய தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு நிறைந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
ழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோயில்கள் ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆகம முறைப்படியே பூசைகள் நடத்தப்படுகின்றன; வேத முறைப்படியல்ல.
தமிழக அரசு அமைத்துள்ள பயிற்சி மையங்களில் ஆகம முறைகள், தமிழில் வழிபாடு ஆகியவற்றில் நன்கு பயின்று சான்றிதழ்கள் பெற்ற பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்கள் 38 கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்து ஆணை பிறப்பித்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.
திருநாவுக்கரசர், இராமானுசர் போன்றவர்கள் காலத்திலிருந்து வள்ளலார், பெரியார் காலம் வரை இறைவழிபாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதையும், தமிழில் வழிபாடு நடத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. இது உள்ளபடியே பெருமையைத் தருகிறது. அதே நேரம் இச்செயல்பாட்டுக்கு எதிராக சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் எதிர்ப்புக் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குறிப்பாக, சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவு தவறானது என்றும், இந்த ஆணையை திரும்பப் பெறாவிட்டால் உரிய நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என தமிழக அரசை மிரட்டுவது வெட்கக் கேடானதாகும்.
2011ஆம் ஆண்டு இந்திய அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி 133கோடி மக்களில் சமற்கிருத மொழியை எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,821 மட்டுமே ஆகும். தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை வெறும் 803 ஆகும். இவர்களில் ஆண்கள் 402பேரும், பெண்கள் 401பேரும் ஆவார்கள். அர்ச்சகர்களாக பெண்களை ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. எனவே, தமிழ்நாட்டில் சமற்கிருதம் தெரிந்த அர்ச்சகர்களின் எண்ணிக்கை வெறும் 402 மட்டுமே ஆகும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள 32,000க்கும் மேற்பட்ட கோயில்களில் வடமொழியில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களில் மிகப்பெரும்பாலோருக்கு வடமொமொழி தெரியாது என்பதே அப்பட்டமான உண்மையாகும். அது இப்போது வெளிப்பட்டுள்ளது.
சமற்கிருத மந்திரங்களைத் தமிழிலேயே எழுதி வைத்துக்கொண்டு தப்பும், தவறுமாக ஓதுகிற அர்ச்சகர்களே இங்கு அதிகம். எனவே, வடமொழியில் அர்ச்சனை செய்பவர்களுக்குத் தேர்வு நடத்தி, அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும். தேர்வு பெறாதவர்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் அரசு பயிற்சி மையங்களில் தமிழ் அர்ச்சனை செய்வதில் தேர்ச்சிப் பெற்றவர்களை உடனடியாக நியமிக்கும்படி முதல்வர் அவர்களை தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment