இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 5 May 2023

மீட்கப்படுமா கண்ணகி கோயில்? - ச.ந.இளங்குமரன்

தமிழ்நாட்டு வரலாற்றில் புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்த கண்ணகிக்கு, சேரன் செங்குட்டுவனால் அமைக்கப்பட்ட கோயிலில்  திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் காவல் தெய்வமாக இருக்கின்ற கண்ணகியை வழிபடுவதற்கு கேரள அரசின் அனுமதி பெற்றே செல்ல வேண்டிய அவலச் சூழல் இன்றும் தொடர்ந்து நிலவுகிறது.

கேரளத்தின் பிடியிலிருந்து கண்ணகி கோவிலை மீட்கக் கோரியும், ஆண்டுக்கு ஒரு நாள் விழா என்பதைத் தாண்டி ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு சென்று வருவதற்கு மக்களுக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், கண்ணகி கோயிலுக்குத் தமிழ்நாட்டின் வழியாகவே  பாதை சரி செய்யப்பட வேண்டும் என்றும், கோயில் வழிபாட்டிற்கு கேரளா அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் தமிழ்நாட்டரசுக்கு இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டுகளில் தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த உயர்திரு பல்லவி பல்தேவ் அவர்களிடம் கண்ணகி கோயில் உரிமை மீட்பு குழுவின் தலைவர் என்ற முறையில் நேரடியாக  விண்ணப்பம் கொடுத்தோம்.

மேலும் கண்ணகி கோயிலின் முகப்பு வாயில் தமிழகத்தை, குறிப்பாக மதுரையை நோக்கியே அமைந்துள்ளது. எனவும் 1817 ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய அளவையே (சர்வேதான்) மிகவும் பழமையானது என்றும்,  இதில் கண்ணகி கோயில் தமிழ்நாட்டு எல்லைப் பகுதியிலேயே இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்பதையும் விளக்கினோம்.

அதன்பின்னர் 1893, 1896 ஆம் ஆண்டுகளில்  நடத்தப்பட்ட அளவையின் (சர்வேயும்) பட்சியும் 1913, 1915 இல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதனையே வலியுறுத்துவதாக உள்ளன என்பதையும் வலியுறுத்தினோம். 

1959 ஆம் ஆண்டு வரை கேரள அரசு, கண்ணகி கோயில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976 ஆம் ஆண்டு தமிழக கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய அளவையிலும் (சர்வேயிலும்) கண்ணகி கோயில், கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழ்நாடிற்குள்தான் இருக்கிறது என்பதையும் ஆட்சியர் அவர்களிடம் எடுத்துரைத்தோம். 

இச்செய்தி அன்றைய தினத்தந்தி நாளிதழிலும் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தி  குறித்து உறுதியாக மேல் நடவடிக்கை எடுப்பாதாக தேனிமாவட்ட  ஆட்சியர் பல்லவி பல்தேவ் சொன்னார்கள்.  ஆனால்  நாங்கள் முன்வைத்த  கோரிக்கைகள் இதுவரையில்  கண்டு கொள்ளப்படாமலேயே இருக்கிறது. 

தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தக்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுத்து கண்ணகி கோயிலின் உரிமை தமிழ்நாட்டுக்கு உரியது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை முன் வைக்கிறோம்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், தலைவர் கண்ணகிகோயில் மீட்புக்குழு
தேனிமாவட்டம்.

No comments:

Post a Comment