இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 28 February 2023

தமிழில் பெயர்ப்பலகை

தேனி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி பெரியகுளம் ராமானுஜர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.   பெரியகுளம் நகர வணிகர் சங்கத் தலைவர் முன்னிலை வகித்தார்.  மேனாள் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் பெ.சந்திரா, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் வைப்பதற்கான சட்டம் குறித்தும், வைக்கவேண்டிய தேவை குறித்தும், அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்களும் தமிழில்தான் இருக்கவேண்டும் வலியுறுத்தியும் பேசினர். 
நிகழ்வில் பெரியகுளம் வணிகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் அன்புக்கரன், தாமோதரன், மணிகார்த்திக், பாண்டியமகிழன், கவிக்கருப்பைய, நித்தியானந்தன் ஆகியோர் வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது தொடர்பான தங்களது ஆலோசனைகளை வழங்கினர். புருசோத்தமன் நன்றி கூறினார்.

Monday, 27 February 2023

தமிழ் ஆட்சிமொழிப் பட்டிமன்றம்

தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா நடத்தப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டக் கம்மவார் சங்கக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் ஆட்சிமிழிச் சட்டச் செயலாக்கத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது! போதுமானதல்ல! என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 
பட்டிமன்றத்தின் நடுவராக வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் நடுவராகச் செயல்பட்டார். 

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் கோ.சீனிவாசன் தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பேரா.இரதிதேவி அனைவரையும் வரவேற்றார். தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் பெ.இளங்கோ தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பாகச் சிறப்புரையாற்றினார்.

பட்டிமன்றத்தில் அரசு அலுவலர்களின் ஆர்வம் போதுமானது என்று ஆசிரியர் ஆ.முத்துக்குமார், முனைவர் சுகன்யா, மாணவர் மணிகண்டபிரபு ஆகியோரும், போதுமானதல்ல என ஆசிரியர் இலட்சுமிகுமரேசன், முனைவர் தாழைச்செல்வி, மாணவர் பாலகணபதி ஆகியோர் மிகச் சிறப்பாகத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். 

தமிழ்நாட்டில் 80 க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இருக்கின்றன. ஆட்சி மொழிச் சட்டத்தை அரசு அலுவலர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் அந்த அரசாணைகளைச் செயல்படுத்துவதில் பெரும்பான்மையான அரசு அலுவலர்கள்  ஆர்வம் காட்டுவதில்லை. காட்டியிருந்தால் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருந்திருக்கும். அரசு அலுவலர்களுடைய கையொப்பம் தமிழிலேயே இருந்திருக்கும். அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படுகின்ற கோப்புகள் தமிழிலேயே இருந்திருக்கும். பெரும்பான்மையான அரசுத் துறை நிறுவனங்களில் இந்த நிலை இல்லை என்றும்,  ஆட்சி மொழிச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுப் பணியாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான பல்வேறு சன்றுகளை முன்வைத்துத் பட்டிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

நிகழ்வில் புருசோத்தமன், அழகுமாரி, கண்ணன் மற்றும் பேரசிரியப் பெருமக்கள் எனப் பலரோடு மாணவ மாணவிகள் திரளாகாக் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

Friday, 24 February 2023

வரைவுகள்

24-02-2023 
இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழிச்சட்ட  விழிப்புணர்வு வார விழாவில் நான்காம் நாள் நிகழ்வில் அரசு அலுவலகப் பணியாளருக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறையின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ச.வினோத்குமார் அவர்கள் பயிற்சியை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் சிறப்பு வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ் மொழி குறித்தும், அதன் முதன்மை குறித்தும், ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் பேசினேன். 

நிறைவாக பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக தமிழ் வளர்ச்சி உதவி அலுவலர் புருசோத்தமன்  அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன் நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

தமிழ் ஆட்சிமொழி

21-2-2023 இன்று தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வினை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா அவர்கள் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். உடன் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உமேஷ் டோங்கரே அவர்களும் கலந்து கொண்டார்.  தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் இளங்கோ அவர்கள் ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பான அறிமுக உரையோடு வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு தமிழ் விழிப்புணர்வுச் சொற்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் தாங்கி ஊர்வலமாகச் சென்றனர்.

இந்நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் அறக்கட்டளை, வராகநதி தமிழ்ச்சங்கம்,  நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம், பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றம், தமிழ்நாடு புலவர் பேரவை உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பரப்புரையாக வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன்  தமிழ் ஆட்சி மொழிச் சட்ட விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்களை முழங்கினார. பட்டிமன்ற நடுவர் கவிக்கருப்பையா, கவிஞர் பாண்டியமகிழன் ஆகியோரும் தொடர்ந்து தமிழ் மொழி விழிப்புணர்வு முழக்கங்களை முழங்கியவாறு பரப்புரையில் தொடர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரம் ஊர்வலம் நடைபெற்றது. 

பின்பு இந்நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச்  சிறப்பிக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சி உதவி அலுவலர் புருசோத்தமன்  அழகுமாரி, கண்ணன் ஆகியோர் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து விழா சிறப்புர ஒத்துழைப்பு நல்கினர்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

(நன்றி ஒளிப்படம் அண்ணன் தேனி  பாலா)