பொங்கல் திருநாள்
உலகெங்கும் செழிப்பதற்கும் உலகுயிர்கள்
உவப்புற்று வாழ்வதற்கும் நாளெல்லாம்
உலவுகின்ற பகலவனைப் போற்றுகின்ற
ஒளித்திருநாள் ஒப்பற்ற தைமுதல்நாள்
நிலவெனவே நெஞ்சமது குளிர்ந்திருக்கும்
நினைவுகளில் மகிழ்ச்சிவெள்ளம் நிறைந்திருக்கும்
கலகலப்பாய் உறவெல்லாம் ஒன்றுகூடி
கரும்போடு வைப்பர்கா ணுப்பொங்கல்
மாடாக உழைக்கின்ற மாண்புமிகு
உழைப்பாளர் உழைப்பினுக்கு உறுதுணையாம்
மாடதனின் பாடதனைக் கொண்டாடும்
பாங்குறுநல் திருநாளாம் பைந்தமிழர்
நாடெங்கும் கொண்டாடும் நல்லுழவர்
திருநாளில் வீதியெல்லாம் தோரணங்கள்
வீடெல்லாம் காண்கிறது விழாக்கோலம்
பட்டியெலாம் பொங்குதம்மா பாற்பொங்கல்.
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி
No comments:
Post a Comment