*தூய தமிழ்ப் போற்று*
தமிழ்நாட்டில் தனித்தமிழைப் போற்றுதற்கு
தஞ்சையிலே கூடியுள்ளோம் பாவரங்கில்
இமிழ்கடல்சூழ் உலகாண்ட இன்மொழிக்கு
இப்படியோர் நிலைதன்னை ஈந்தவர்யார்?
அமிழ்தினிய செந்தமிழில் அயல்மொழியை
உமிழ்ந்தவர்கள் தமிழரென்று அறிந்திலரோ?
தமிழென்றும் தமிழரென்றும் மேடைங்கும்
முழங்கியதன் னலக்கேடர் செயலன்றோ.
ஆங்கிலத்தில் தலைப்பெழுத்தை எழுதுகின்றார்
அயல்மொழியில் பெயர்சூட்டி மகிழ்கின்றார்
தீங்கில்லா செந்தமிழில் நாள்தோறும்
தீங்கிழைக்கும் பிறசொல்லைக் கலந்தெழுதி
பாங்குறுநல் தமிழ்மொழியைச் சிதைக்கின்றார்
பழம்பெருமை தனைமூடிப் புதைக்கின்றார்
ஈங்கிவர்கள் செயல்தன்னைத் திருத்துதற்கு
இவ்வரங்கில் பாவலர்கள் பாடுகின்றோம்.
தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கல்விவேண்டும்
தமிழ்நாட்டின் கடைகளிலே பொருட்பெயர்கள்
தமிழிலேயே இருக்கவேண்டும். எந்நாளும்
தமிழ்நாட்டு வணிகரது நிறுவனங்கள்
தமிழ்ப்பெயரே தாங்கவேண்டும். ஏடெல்லாம்
தமிழ்மொழியில் எழுதவேண்டும் இசையெல்லாம்
தமிழாக இருக்கவேண்டும் எங்கெங்கும்
தமிழ்வளர்ச்சி காணவழி செய்குவமே!
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம்,
தேனி, நாகலாபுரம்.