இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 29 January 2022

வையைப் பதிப்பகம் நடத்தும் மேடைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா.

நூல் வெளியீட்டு விழா 
தேனி  மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனியார் மண்டபத்தில் வையைத் தமிழ் சங்கம் & வையைப் பதிப்பகம் தேனி  நடத்தும் முனைவர் பேராசிரியர் சே .பத்மினி பாலா அவர்களது "மேடை பூக்கள் " கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. புலவர் இளங்குமரன் தலைமையேற்று சிறப்புரை செய்தார். பொன்பாலமுருகன் தலைவர் வழக்கறிஞர் வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்புரை நிகழ்த்தி சிறப்புரையாற்றினர். புலவர் ராஜரத்தினம் ,MKM முத்துராமலிங்கம ,சந்திரசேகர்,செல்லப்பாண்டியன் , ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார் .நூல் வெளியீடுபவர் வி எஸ் பி கண்ணகி சேகர்  , நூல் பெறுபவர் PT சிதம்பர சூரியவேலு நூல் மதிப்புரை கவிவித்தகர் பொற்கைப்பாண்டியன் நூலைப்பற்றி சிறப்புரையாற்றினார். மு அர்ச்சுனன், மா. தங்கப்பாண்டியன்  நூல் குறித்து உரையாற்றினார்.நூலாசிரியர் சே .பத்மினி பாலா ஏற்புரையாற்றினார். ஈஸ்வர்ராஜா, நீலப்பாண்டியன்,அன்புக்கரசன், பாண்டிமகிழன் லட்சுமி, மணிகார்திக், கணேசன், கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .இந்நிகழ்வில் வைகை தமிழ் சங்கம் தேனி , சங்கத் தமிழ் அறக்கட்டளை நண்பர்கள் கலந்து கொண்டனர். இச்சிறப்பு ஏற்பாட்டினை  வழக்கறிஞர் பாலமுருகன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். இவருடைய சிறப்பு அனைவர் இடத்திலும் பாராட்டை பெற்றார். தமிழக அரசின் உத்தரவின்படி முகக்கவசம் கிருமிநாசினி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது .

நன்றி காஞ்சித் தலைவன் செய்தியாளர் திரு தெய்வேந்திரன்.

மேடைப்பூக்கள் நூல் வெளியீட்டு விழா

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மேடைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் புலவா் ச.ந.இளங்குமரன் தலைமை வகித்தாா். பெரியகுளம் வழக்குரைஞர்கள் சங்கம் பொன் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். புலவர் இராசரத்தினம், வழக்குரைஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கைபாண்டியன், தங்கப்பாண்டியன் , அர்ச்சுனன் ஆகியோர் மதிப்புரை வழங்கினா். தொழிலதிபா் வி.எஸ்.பி. கண்ணகி சேகா் மேடைப் பூக்கள் நூலை வெளியிட்டாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.டி. சிதம்பசூரியவேலு நூலை பெற்றுக்கொண்டாா். நூலாசிரியா் பேராசிரியா் சே. பத்மினி பாலா ஏற்புரையாற்றினாா்.

இவ்விழாவில் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வையைத் தமிழ்ச் சங்கத்தினா் செய்திருந்தனா்.

Wednesday, 19 January 2022

திருவள்ளுவர் மன்றம் 29 ஆண்டுவிழா

நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் 29 ஆம் ஆண்டு விழா 14-01-2022 ஆம் நாள் தமிழ்நாடு அரசின் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி, தமிழ்ப் புத்தாண்டு விழா மற்றும் தமிழர் திருநாள் விழாவாக  நாகலாபுரம் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. 

தை முதல் நாளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை இரா.மு.சிவராமன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 40 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாலை நிகழ்வாக  "இன்றைய பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சமுதாயத்திற்கு வளர்ச்சியா? தளர்ச்சியா?"  என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது பட்டிமன்றத்திற்கு பீட்டர்பால்ராஜ் ஆசிரியர் தலைமை வகித்தார். வளர்ச்சியே என்ற அணியில் மு.திலகவதி, ஆ.கவியரசி,  நிவேதா ஆகியோரும், தளர்ச்சியே என்ற தலைப்பில் பா.கவிச்செல்வன், மா.பா.மெய்கண்டார், க.தமிழழகு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். 

அதனை தொடர்ந்து "தமிழ் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது நேற்று தலைப்பில் தமிழாசிரியை அ.கிருஷ்ணவேணி,  இன்று தலைப்பில் இரா.மருது,   நாளை என்ற தலைப்பில்  மு.கருப்பசாமி ஆகியோர் மிகச் சிறப்பாகப் பேசினர்.  இந்த இனிய நிகழ்வுக்கு மருத்துவர் சி.இராமசாமி தலைமை தாங்க, பா.தமுழ்ச்செல்வன் வரவேற்க, கு.கார்த்திக் நன்றியுரை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து புலவர் ச.ந.இளங்குமரன் தொகுப்புரை ஆற்றினார்.

15-01-2022 நாள் காலை 10 மணிமுதல் மாலை 6-00 மணிவரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரவு 7-00 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது. விழாவிற்கு திருவள்ளுவர் மன்றத் தகைவர் பா.அமுதவல்லி தலைமை வகித்தார். பெரியகுளம் வழக்குரைஞர் சங்கத் தலைவர் பொன்.பாலமுருகன் முன்னிலை வகித்தார். பெரும்புலவர் இளங்குமரனார் அவர்களுக்கு நினைவேந்தலோடு நிகழ்வு தொடங்கியது. இரா.மு.சேதுபதி வரவேற்க, அ.முருகன் நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பி கவிஞர் பா.கவிதா மற்றும்   முனைவர் பத்மினிபாலா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  முன்னிலை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு திருவள்ளுவர் மன்றம் மற்றும் சிவசங்கர் அறக்கட்டளை சார்பில் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

திருக்குறளில் உலகச் சாதனை படைத்த முத்தமிழ் சாமினி,  செந்தமிழ் சாலினி ஆகியோருக்கும், அரசு தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற பனிமொழி அவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது புலவர் ச.ந.இளங்குமரன் பாராட்டுரையோடு நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார். நிறைவாக திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1330 திருக்குறள் சொன்ன பைந்தமிழ் ரோசினி அவர்களுக்கு உரூ 1000 பரிசாக வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. திருக்குறள் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், பிறபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் திருவள்ளுவர் மன்றம் மற்றும் சிவசங்கரனார் நினைவாக பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. நிறைவாக  ப.முத்துக்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Thursday, 6 January 2022

மரம் கவிதை

கோடை வெயிலில்
குளிர்ந்த நிழல்தரும்
கடவுளை வழிபடப்
பூக்களும் தரும்
கடும்பசிக்கும் தரும்
உணவும் நீரும் 

அம்மணம் மறைக்கும்
ஆடை தன்னை
அழகாய் நெய்ய 
நூலைத் தரும்

கூடிநாம் வாழ்திடக்
கூடுதரும்
குழந்தை நடக்க
வண்டி தரும்

பிணியைப் போக்க
மருந்து தரும்
பிள்ளை தூங்க
தொட்டில் தரும்
தள்ளாடு வோர்க்கும்
தருமே ஊன்றுகோல்

காற்றில் மாசைக்
கணக்காய்க் களையும்
கைகளை அசைத்து
மழையை அழைக்கும்

எத்தனை பயன்கள்
மரத்தால் விளைந்தன
மறந்தான் மனிதன்
மரத்தின் பயனை
மணந்தான் மனிதன்
மரணம் தன்னை

இயற்கைத் தாயின்
இதயம் தன்னை
வெட்டிச் சிதைக்கும்
வேடிக்கை மனிதா
சிதைவது மரங்களல்ல
உனது வாழ்க்கை...!

ச.ந.இளங்குமரன்