இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 17 June 2021

மறம் - வீரம். சொல்லாய்வறிஞர் ப.அருளியார்.

புடவிப் பெரும்பரப்பினுள் மிகவும் பொருள் பொதிந்துள்ளதாகத் தென்படும் உலகவுருண்டையில், வீறொடு உலவி இதனையே ஆண்டு கொண்டிருக்கும் மாந்தவுயிரனின் தோற்றமும் - இயக்கமும் இயற்கை வளர்ச்சியின் படிமலர்ச்சிகளை உடையன! இம் மலர்ச்சி நிலையில், மாந்தவுயிரன் இவ்வாறு உருவாகி நிலைத்துப் பல்கித் தொடர்ந்து பெருகியோங்கி நிற்பதனுள், இவ்வுயிரனின் முன்னைய படிநிலையுயிரிகள் யாவும் பெற்றிருந்த பல்வேறு தன்மைகளும் அல்லது பண்புகளுங் கூடப் படிப்படியே மலர்ச்சியெய்தி வந்துள்ள உண்மையும், இவனின் வளர்ச்சி பற்றிய வரலாற்றில் விளக்கமாகவும் துலக்கமாகவும் புலனாகின்றது.

ஒன்றன் வளர்ச்சிக்கு ஊட்டம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா?! வளர்ச்சிக்குரிய உயிரிக்கு அதன் வளர்ச்சிநிலைக்கு இடையிடையே பிறிதொன்றால் தாக்கம் நேர்கையில், -- அதற்கு நேர்நிற்கும் எதிரியை எதிர்த்துத் தடுத்து அல்லது தாக்கி -இயலுமானால் அழித்துச் செல்வதுங்கூடத் தேவையாகின்றது! இல்லெனில், அதன் வளர்ச்சிநிலை தடைப்படுவது மட்டுமன்று; இருப்பே கூட இல்லாமற் போய்விடலாம்! எனவேதான், வளர்ச்சிக் குரியவை யாவும், தம்மை எதிர்ப்பனவற்றை எதிர்க்கும்; தம்மைத் தாக்குவனவற்றைத் தாக்கும்; தம்மை அழிக்க முற்படுவனவற்றை அழிக்க முற்படும்; அழிக்கும்! அல்லது, தாம் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கும்; தாம் தாக்க வேண்டியவற்றைத் தாக்கும்; தாம் அழிக்க வேண்டியவற்றை அழிக்க முற்படும்; அழிக்கும்! இவை யாவும் இயற்கை நெறிகளே!

''மறம்'' என்னும் வீரப் பண்பானது, தமிழர்க்குரிய மிகச் சிறப்புடைய கூறுகளிலொன்றாக மிகவும் பெரிதுபடுத்திப் பேசப்படுகின்றதே!... அம் "மறம்" என்றால், என்ன தெரியுமா? (-"தடுப்பு'--தடுக்கும் ஆற்றல் --- தடுக்குந் திறம் --- ) மறுக்கும் திறம் என்பதேயாகும் (அதாவது, மறு + அம்> மறம்.) தாக்க வருமொன்றைத் தடுப்பது, முதல் செயல்! தாக்க வருகின்ற ஒன்றை, நாமும் அவ்வாறே தாக்குவோமேயானால் -அதனின் தாக்கம் நம் மேல் விழும்! நம் தாக்கம் அதன்மேல் விழும்! இரு நிலைகளுக்கும் அவற்றின்வழி அழிவு நேரலாகும்! தாக்கற்கு எதிராகச் செயத்தக்க முதல் வினை, தாக்குதல் அன்று; தடுப்பே! தடுப்புக்கு அடுத்தே தாக்குதல் தொடுக்க வேண்டும்! இரு மோதுயிரிகளும் - ஒத்த வலிமையும் ஒத்த திறமையும், ஒத்த மதிமையும் கொண்டிருந்தாதாம்  இந்நிலை ஒக்கும்! இவ்விரண்உருவில்தான் மிகுவலிமையுடைய தாகவிருப்பின், பிறிதொன்றாகிய எளியவுயிரியை வலியது எளிதே வீழ்த்திவிடும்! அங்குத் தாக்குதலுக்கெதிரான தடுப்பே பயன்படாது! வலிய ஒன்று - எளிய ஒன்றைத் தடுக்கையினாற் கூட வீழ்த்த வழியுண்டு! தாக்குதலுக்கு எதிர்வினை தாங்குதல்![ஒநோ : தாங்கு தல் = பொறுத்தல்;பொறுத்தலால் அதாவது தாங்குதலால் தடுத்து நிறுத்தல் ஒ.நோ தாங்கு + அல் தாங்கல் = வெளியேறாவாறு நீரைத் தடுத்துவைத்துக்கொண்டிருக்கும் பெருங்குளம். (காண்க:) வேடன் தாங்கல். தாங்கல்> (English ) Tank.

காண்க : நூல்:'தகுதி”---அருளி (1979)] தடுப்பதிலும் மிகப்பல முறைகள் உள! தடுப்பதற்கும் மிக்க ஆற்றல் வேண்டும்! தாக்க முற்படும் உயிரியினும் - தாக்குதலுற நிற்கும் உயிரிக்குத் தடுக்குந்திறன் வேண்டும். இல்லெனில், தாக்குற்றுத் தடுக்குற்றுத் தலை சாயலாகும்!

ஒருயிரி தாக்க முற்படுகையில் --- அதனைத் தாங்கித் தடுக்கும் பிறிதோர் உயிரியின் எதிர்முயற்சிள் பல திறத்தன! படிப்படியே,-இருப்பு விருப்பு பற்றி உயிரிகளிடம் இத் திறன்கள் வளர்ந்தன! பிற உயிரிகளின் தாக்குதல் -- தடுத்தல் வினைமுறைகளை நன்கு கூர்ந்து நோக்கி வந்த மாந்தவுயிரன் தன் அறிவுத் திறத்தால் அவற்றிடையிலான நுண்ணுட்பங்களை மேலும் மேலும் விளங்கிக் கொண்டவனாய் அவ்வாறே அவற்றைப் பின்பற்றவும் -சில நிலைகளில் அவற்றை மேலுந் திருத்திச் செப்பஞ்செய்து கொண்டநிலையில் பயன்படுத்தவுந்தொடங்கி, மிக மிக வளர்ந்தான்! [தமிழகத்துக்கே உரிய பண்டைய சண்டை முறைகளில் சிலவற்றைப் பயிலும் வாய்ப்பு நேர்ந்தபோது, தடுக்கும்போதே -தடுக்கும் அதே முறைமையிலேயே, அதே கணத்திலேயே தாக்குதலையும் உடன் நிகழ்த்தி விடும் நுண்வினைப் போக்கின் கணக்கு முறையானது -- எனக்கு மிகவும் வியப்பளித்தது!] [இம் முறைமை, - அவனே தனக்குத்தானே எண்ணி உருவாக்கிய ஒன்றன்று! கண்டு பிடித்தது! அதாவது, பிற போருயிரிகளின் தாக்குதல் - -தாங்குதல் (தடுத்தல்) முறைகளைக் கண்டு நன்கு உட்கொண்டு, தானும் அவற்றைப் பயின்று பயன் கொண்டது, அது!]

வலிமையற்ற உயிரியொன்று, வலிமையார்ந்த பிற உயிரி யொன்றின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து எதிர்த்து நிற்கத் திடாரிக்கமும் இல்லாநிலையில் திராணியும் --- என்ன செய்யும் ? அவ்விடத்தினின்று பிரிந்து தப்பித்து ஓடும் ! இவ் வினையுங் கூட - ஒரு வகையில் காப்பு வினையே!

இப்பொழுது நாம் காணும் குதிரை,-- மிகு பண்டைய தொடக்கக் காலத்தில் நரியளவான உருவில்தான் இருந்தது! அதனைப் போலும் கருவமைந்திருந்த பிற விலங்குகளுக்குப் பெரும்பாலும் கொம்புகள் அமைந்திருந்தன! அவற்றில் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தான் - அவற்றைக் கண்டு பறக்கப்பறக்க ஓடி ஓட்டத்திலேயே - அல்லது ஓட்டத்தினாலேயே தப்பித்துக் தப்பித்துத் தன் இன வளர்ச்சிலையே காத்துக்கொண்டது! இன்றைக்கு ஆற்றல் அலகையே குதிரையின் வலிமைக்கு ஈடாகக் கணக்கிடக்கூடிய நிலைக்கு அதவின் தற்காப்பு முயற்சியான ஓட்டமே காரணமாக அமைந்தது? (Horse-Power பரித்திறன்)

விலங்குகளுக்குத் தலைமீது வாய்த்திருக்கும் கொம்புகள் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கால்விரல்களின் துனிப்பகுதிகளில் வல்லிதாக வாய்த்திருக்கும் உகிர்கள்[நகங்கள்)ஊருபிரிகளான நண்டு. தேன், நட்டுவக் காலி முதலியவற்றுக்கு வாய்த்திருக்கும் கொடுக்குகள்' போன்றன யாவும். - அவையலையும் தற்காப்புக்கௌத் தாம் முயன்ற முயற்சி வினைகளுக்குப் பரிசுகளாகப் படிப்படியே இயற்கை தந்த எழுச்சிக் கருவிகளாகுவளவே! அலையே- அவற்றின் தற்காப்புப்படைக் கலங்களும் -க்கற்கலங்களும் ஆகி நீடினர்

செடி கொடி மரங்களாகிய நிலைத்திணைகள் சிலவற்றின் மீது கரிதாக நீடி முனைத்திருக்கும் முன்ளெழுச்சிகள் கூட— அவற்றின் தற்காப்புக்கெனத் தோற்றிக் கொண்ட படைக்கலங்களேயாகும்!

தவிர்க்க முடியாவாறு வளர்ந்து கொண்டேயிருக்கும் விரல் உகிர்களை (நகங்களை) இன்றைக்குத் தேவையற்றனவாக நாம்தெளிந்த நிலையில் சீவியெறிந்து குப்பையொடு சேர்க்கின்றோமே, இவ்வுகிர்கன்யாவும் --- தம்மின் பண்டைய முன்னுயிரிகள் தம் தற்காப்புக்கெளவும் ---தாக்கற்கெளவும் தாமே வளர்த்தெடுத்த கூர்ங் கருவிகளின் எச்சவினைவுகளின் இன்றைய காட்சிப் பொருள்களே!

தாக்கு என்பதுவும் - தற்காப்பு என்பதுவும் ஒரு காசின் இரு பக்கங்கள் போல்வன ! இரண்டு முயற்சிகளுமே - உயிரியின் படிநிலை மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய மூலவினைகளாகும்! உயிரிக்கு உள்ள உணர்ச்சிகளில் அடிப்படை உணர்ச்சிகளான பசியும் காமமும் போன்று — புற வினைமுறைகளில் இவை மூலவினைகள்

வலிய உயிரியொன்று - எனிய உயிரியொன்றை ~ அல்லது தன் இனத்தில் வலிவற்ற உயிரியொன்றைத் தாக்க முற்படுகையில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத தேர்உயிரி. அதன் முன்னீடாக வளைவது அல்லது கருள்வது என்பது இயற்கை வினை ! இவ் " வளைவு என்பது,[வலியதன் முன் எளியதானது -) ஒடுங்குவதன் அல்லது அடங்குவதன் அடையாளக் காட்சியாகும்! இவ்வியற்கை வினைமுறை, தோற்ற ஒற்றைப் புரையன் (one cellular object ] தொடங்கி - மாந்தவுயிரன் ஈறாக அனைத்துயிரிகளிடத்தும் படிவுகொண்டு தொடர்ந்தது; தொடர்கின்றது; தொடரும்!

தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத உயிரி, - அத்தாக்கத்தின்வழி நேரவுள்ள விளைவெண்ணி - அதற்கும் முன்னரேயே தான் உள்ளங் கொள்ளுவதாகிய வளைவு உணர்ச்சியே - மனவளைவே “அச்சம்” என்னும் பெயரால் தமிழமாந்தனால் சுட்டப்பெற்றது!

இவ்வுணர்ச்சியைக் குறித்துத் தமிழர் வழங்கிய சொற்களாக -

1. அஞ்சு 2. அச்சு 3. அச்சம் 4. அச்சலிப்பு 5. வெருவு (வெரூஉ) 6. வெருட்சி 7.உட்கு 8.சூர் 9. கொன் 10.நடுக்கம் 11. அதிர்ப்பு 12. விதிர்ப்பு 13. விதர்ப்பு 14. பனிப்பு 15. உரு 16. உரும் 17. உரும்பு 18. பலம்பு 19. கவலை 20. கலங்கள் 21. கலக்கு 22. கலக்கம் 23. பேம் 24. அணங்கு 25. அடுப்பு 26. விறப்பு 27. பிறப்பு 28. வெறி 29.வெறுப்பு 30, வெடி 31.நாம் 32.நாமம் - என்னும் முப்பத்திரண்டு எண்ணிக்கையின, தமிழ் இலக்கிய இலக்கண நூல்களிலும் சொற்றொகை நூல்களிலும் விரவலாகப் பரவிப் படர்ந்து காட்சியளிக்கின்றன!

(தமிழரிமா ப.அருளியார் ஐயா அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம்.

Monday, 14 June 2021

சங்ககாலத் தமிழர் வாழ்க்கை. ச.ந.இளங்குமரன்

பண்டைத் தமிழரின் நிலவியல் வாழ்க்கை..

(3) நிலத்துமக்கள் வாழ்க்கைமுறை

நாட்டுவாழ்க்கைநிலை: இக்காலத்திற்போலச் நூல்கள் முற்காலத்தில் எழுதப்படாவிடினும், முதற்றமிழரின் வாழ்க்கை முறை அகப்பொருட் செய்யுட்களில், சிறப்பாகக் கோவையில், மிகக் காவலாகப் போற்றப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு நாகரிகமடையினும், அதனால் அவரது நடையுடை கொள்கை எவ்வளவு மாறினும், பண்டைமுறைபற்றியே என்றும் பாடவேண்டுமென்று கோவைக்கு ஒரு மரபுள்ளது. அது புலனெறிவழக்கம் எனப்படும். அதாவது, உள்ளதும் இல்லதுங் கலந்து இனியதாகவே யிருக்கும் நாடக முறையும். இனியதும் இன்னாததுங் கலந்து உள்ளதாகவே இருக்கும் உலகியல் முறையும் ஒருங்கே தழுவிய நூனெறி வழக்காகும். சரித்திர

குறிஞ்சி நாட்டரசன் மகளுக்கு உடையும் அணியும் தழையாகவே கோவையிற் கூறியிருப்பது, மிகப் பழங்காலத்து இயல்பைக் குறிப்பதாகும். இக்காலத்திற் கராச்சிப் பட்டணியும் ஒரு பெண்ணைக்குறித்துக் கோவை பாடினும் பண்டைத் தழையே தலைவன் கையுறையாகக் கூறப்படுவ தன்றிக் கராச்சிப்பட்டு கூறப்படாது. இங்ஙனமே பிறவும்.

பண்டைத்தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலத்திற் குடியிருந்தனர். இவை ஐந்திணை யெனப்படும். இவை நிலைத்திணையாற் பெயர் பெற்றன (இடவனாகு பெயர்.) இவற்றின் பெயர் களுள், பாலை மருதம் என்னும் இரண்டும் மரப்பெயர்கள்: ஏனைய பூப்பெயர்கள்.

பாலை எனபது பிறநாட்டிலுள்ளதுபோன்ற வறண்ட மணல் நிலமன்று. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலுள்ள நிலம் பாலைமரச் சிறப்பால் பாலையெனப்பட்டது. அது முதுவேனிற் காலத்தில் வறண்டும் மற்றக் காலத்தில் செழித்துமிருக்கும்.

வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்

றானலந் திருகத் தன்மையிற் குன்றி

முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்'' என்று காண்க. இளங்கோவடிகள் (சிலப். 11: 12-16) கூறுதல் பாலையின் முதுவேனிற்கால நிலையே, பிரிவிற்குரிய 'தாக அகப்பொருட் செய்யுட்களிற் கூறப்படும்.

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

மக்கள் ஐந்திணை நிலத்திற்குப் பிரிந்துபோவது, குறிஞ்சி யினின்று போவதும். அயல்நாட்டினின்று வந்து குடிபுகுந்து போவதுமாக இருவகை. இவற்றுள். முன்னது மக்கட்பெருக் கால் படிப்படியாய் நிகழ்வது; பின்னது தெரிந்துகோடலால் ஒரே சமையத்தும் நிகழக்கூடியது. இவற்றுள் முன்னதே தமிழ்நாட்டில் நிகழ்ந்ததென்க.

குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த காலமுமுண்டு. அது மாந்தன் தோற்றத்திற்கு அடுத்த நிலையாகும். தமிழ் நூல்கள் தோன்றியது மருதத்தில் நகரம் தோன்றியபின் பாதலின். குறிஞ்சியில் மட்டும் மக்களிருந்த கொன்னிலை அப்போது மறைந்துபோயிற்று. அதனாற் குறிக்கப்பட வில்லை. ஆயினும் கொள்ளலாம். அதைக் கருத்தளவையான் அறிந்து

மாந்தன் தோற்றம் ஆணும் பெண்ணுமாய்த்தானிருந் திருக்க வேண்டும்; அவரையே ஆதம் ஏவையென்று கிறித்து மதமும் இஸ்லாம் மதமுங் கூறுகின்றன.

இருமுது பெருங்குரவரினின்றும் பல மக்கள் தோன்றிய

பின், குறிஞ்சியில் இடம் போதாமல், சிலர் முல்லைக்குச்

சென்றனர்.

முதற்காலத்தில் உணவு தேடுவதே மாந்தர் தொழிலா யிருந்தது. குறிஞ்சியில் காய்கனிகளைப் பறித்தும் வேட்டை யாடியும் உண்டுவந்த மக்கள். இயற்கையாய் விளையும் மர வுணவு போதாமையாலும். வேண்டியபோதெல்லாம் ஊனுணவு கிடையாமையாலும், செயற்கையாய்ப் பயிர் பச்சைகளையும் விலங்குகளையும் வளர்க்கத்தொடங்கினர். இதற்கு மரமடர்ந்த குறிஞ்சி வசதியாயிராமையால் முல்லைக்குச் சென்றனர். இதனால் கொடிய விலங்குசுட்கும் ஓரளவு தப்பினர்.

மாந்தன் முதன்முதலாய் வளர்த்த விலங்கு ஆவே. ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம் மாவெனப்பட்டது. மா என்று கத்துவது மா- மான் - மாடு. மா என்பது னகர மெய்யீறுபெற்று, ஆவிற்கினமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப்பெயரா யிருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா (ஆ) வாதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப்பெயராயிற்று. என்பது னகர வீறுபெற்று ஆன் என்றாயிற்று.

(மொழிஞாயிறு தேவநேயப்  பாவாணர் பதிவிலிருந்து...
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்)

Friday, 11 June 2021

மதுரை பெயர்க்காரணம், ச.ந.இளங்குமரன்

மதுரை பெயர்க்காரணம்..

மதுரை என்று முதலாவது பெயர் பெற்றது பஃறுளி ஆற்றங்கரைத் தலைக்கழக இருக்கையே.  அதுவும் இடைக்கழக இருக்கையாகிய கபாட புரமும் (அலைவாய்)  மூழ்கிப் போன பின்பே இற்றை  வைகைக் கரை மதுரை அமைந்தது. அதுவும் மூன்றாம்  மதுரையே.

பாண்டியர் மதிக் குலத்தவராகலின் தம் குல முதலாகக் கருதிய மதியின் பெயரால் தம் முதல் தலைநகருக்கு மதிரை எனப் பெயரிட்டனர். அது பின்னர் மதுரை எனத் திரிந்தது.

ஒ.நோ: குதி-குதிரை, எதிர்கை-எதுகை

குமரிமலை முழுகுமுன்போ, முழுகிய பின்போ குமரி நாட்டில் இருந்து வடக்கே சென்ற தமிழர் வழியினரே, கண்ணபிரான் வாழ்ந்த மதுரையையும் அமைத்தனர். அதற்கு அவர்கள் அப்பெயரிட்டது அவர் தம் முன்னோர் இடத்தை நினைவு கூர்தல் பொருட்டாகும். கண்ணபிரான் ஒரு திராவிட மன்னன். 

கண்ணபிரான் காலமாகிய பாரதக் காலத்தில் வைகை மதுரையில்லை. ஆதலால், நாவலந் தேயத்தில் இரண்டாவது ஏற்பட்டதும்,  வடமதுரையென பட்டதும் கண்ணன் மதுரையே, அதன் பெயர் அந்நாட்டு மொழிக்கேற்ப மத்ரா எனப் பின்னர் திரிந்தது.

சிவபெருமான் தன் சடைமுடியில் உள்ள மதியினின்று மதுவைப் பொழிந்த இடம் மதுரை என்று சொல்லப்படுவதும் உண்டு. அது தொல்கதைகட்டு.

வைகை மதுரையைச் சார்ந்த திருமருத முன்றுறையால் மதுரைப் பெயர் வந்ததென்பது, பேரன் பெயரால் பாட்டன் பெயர் பெற்றான் என்னும் கூற்றை ஒக்கும். என்பது மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்களின் ஆய்வாகும்.

மதுரையின் நாகரிக வளர்ச்சிக்கு பத்துப்பாட்டு, எட்டுத் தொகையில் இலக்கியச் சான்றுகள் உள்ளது. கி.மு நூற்றாண்டிலேயே மதுரை என்ற பெயர் இருந்துள்ளது. அழகர் மலையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் மதிரை என்ற சொல் வருகின்றது. (மொழிஞாயிறு பாவாணர் பதிவிலிருந்து....)

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
தேனிவையைத் தமிழ்ச்சங்கம்

Monday, 7 June 2021

சிலப்பதிகாரம்

நூல்

1.சிலப்பதிகாரம்-அகம் காட்டும் முகம்

'சிலப்பதிகாரம்' என்பது காப்பியப் பெயர்.

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரம் என்னும் பெயர் பதிகத்தின் 59 ஆம் அடியிலும் நூற்கட்டுரையின் 18ஆம் அடியிலும் இடம் பெறுகின்றது.

சிலப்பதிகாரத்தில் 'சிலம்பு' என்னும் சொல் 40 இடங்களில் இடம் பெறுகின்றது. பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய பதினெட்டு நூல்களிலும் 123 இடங்களில் 'சிலம்பு' என்னும் சொல்லாட்சி உள்ளது.

இவ்விடங்களுள் எவ்வோர் இடத்தும் 'சிலப்பு' என்னும் சொல் இடம் பெறவில்லை.

சிலம்பு என்பதில் உள்ள 'ம் ஆகிய மெல்லினம், 'ப்' ஆகிய வல்லினமாக வருதல் செய்யுளில் உண்டு என்று கொள்ள வாய்ப்புண்டு.

''அந்நாற் சொல்லும் தொடுக்கும் காலை வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும் விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும் நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர்"

(சொல்.403)

என்பது தொல்காப்பியம். இதன்படி, வலிக்கும் வழி வலித்தலாய்க் கொள்ளலாமா என ஆராய வேண்டும்.

இவ்வறுவகை விகாரமும் இன்னுழியாம் என்று வரையறுக்கப்படா; செய்யுள் செய்யும் சான்றோர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய செய்யுளின்பம் பெறச் செய்வான் நாட்டுதலை வலியாக உடைய' என்பார் சேனாவரையர்.


மெல்லெழுத்தினை வல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும் வர வல்லெழுத்தாகத் தொடுத்தல் என்பார் தெய்வச்சிலையர்

முந்தை என்பதை முத்தை என்று வழங்கும் தொல்காப்பியம் (சொல். 194).

"குறுங்கை' என்பதைக் 'குறுக்கை" என்று வழங்கும் ஐாங் 266.

'பரம்பு, பரப்பு என்றும்; வரம்பு, வரப்பு/ என்றும்; 'கரும்பு, கருப்பு: என்றும்; 'இரும்பு' 'இருப்பு' என்றும்; இருவகை வழக்குகளிலும் பெருக வழங்குகின்றன.

குரங்கு என்பதைக் குரக்கு எனக் காட்டல் முறையாகாது. குரக்கு என்பதே குரங்கு ஆயது. 'சூர்க்குர் என்று ஒலிக்கும் அதனைக் குர்க்கு, 'அரக்கு' என்று சொல்லிக் குரங்கு என நிலைத்து விட்டது. அதன் ஒலியே இதனை மெய்ப்பிக்கும் சான்று.

"சிலப்பதிகாரம்: இப்பெயர் மென்றொடர்க் குற்றியலுகரம் இயல்பு கணத்துக்கண் திரிந்து வந்தது” என்கிறார் நச்.குற்.9).

சிலம்பு முன் குன்றம், சாரல், தடை பள்ளம் என்பது போல காதய வல்லினம் சிலப்பதிகாரம்/ என்னும் புணர்ப்பில் வந்திலது அ” கர உயிரே வருமொழி முதல் ஆயது. இதனை. “விதப்புக்கிளவி வேண்டியது விளைக்கும் ”என்னும் விதியால்,

"ஒற்றென்ற மிகுதியான் இயல்பு கணத்துக்கண்ணும் குரக்கு ஞாற்சி நிணம், முகம், விரல், உகிர் என மெல்லொற்றுத் திரிந்து வருமாறு கொள்க; சிலப்பதிகாரம் என்பதும் அது என்கிறார். நச்.எழுக்குற்.9.

சிலம்பு என்னும் சொல் சிலம்பிலோ, அதற்கு முந்து நூல்களாகக் கிடைத்துள்ள நூல்களுள்ளோ "சிலப்பு” என வலிக்கும் வழி வலித்தல் என்னும் இலக்கணம் பெற வரவில்லை.

நூற்பெயர் சொல்லும் இடங்கள் இரண்டில் மட்டுமே 'சிலப்பு அதிகாரம்’ எண வந்தமை 'ஒரு குறிப்பை உள்ளடக்கிய ஆட்சியாக இருக்க வேண்டும்" என்று கொண்டு சிந்தித்தல் முறை. மற்றும் வரம்பு, வரப்பு: பரம்பு பரப்பு என்பவை போல, மக்கள் வழக்கிலும் சிலம்பு சிலப்பு என 
என்றும் எங்கும் வழங்கப்பட்டதில்லை என்பதையும் எண்ண வேண்டும்.

கால் அணியாகிய சிலம்பு, ஒலி வகையால் பெற்றது இப்பெயர். இவ்வாறே கோலெடுத்து ஆடும் சிலம்பாட்டமும் ஒலிவழிப்பட்டதே. மேலும், பல்வகை ஒலிக்கு இடமாகவும், எதிரொலி தருவதாகவும் உள்ள மலையைச் சிலம்பு எனல் அறியலாம். அதன் மெல்லொலி விளங்க.

"தினைச்சி லம்புவ தீஞ்சொல் இளங்கிளி;

நனைச்சி லம்புவ நாகிள வண்டு: பூம் புனைச்சி லம்புவ புள்ளினம்; வள்ளியோர் மனைச்சி லம்புவ மங்கல வள்ளையே

எனக் கம்பர் (பால.63) இசைக்கிறார். இம் மென்சிலம்புக்கு வலித்தல் (வன்மை) ஏற்றியது ஏன்? 'வலித்தல் விகாரம் பெற்றது' என்று, இலக்கணம் கூறுவதற்காகவா?

இளஞ்செல்வியர் காலணி தண்டை ; அவர் குமரிநிலையடையும் போது அணிவது, சிலம்பு: அச்சிலம்பு மண நாளுக்கு முன் நாள் கழற்றப்படும். அக்கழற்றுதல் நிகழ்வு, 'சிலம்பு கழி நோன்பு' எனப்பட்டது. மகளிர் காலில் சிலம்பு உள்ளமை, இல்லாமை கொண்டே மணமானவர், மணமாகாதவர் என அறிந்து கொள்ள வாய்த்த காவல் ஏற்பாடு அஃதாம்.

கண்ணகியார் காற்சிலம்பு காலில் இல்லை; ஏனெனில், சிலம்பு கழி

நோன்பு நிறைந்து 'மண அணி'பூண்டவர் அவர். காலணிகலம் கழற்றி. கழுத்தணி பூண்ட நிலை அது. ஆதலால், சிலம்பு காப்புப் பெட்டகத்தில் இருக்கும் பொருளாயிற்று. அச்சிலம்பு பொருளாக ஈட்டும் திட்டம் கொண்டே மதுரைக்குக் கிளர்ந்தனர் கோவல கண்ணகியர்.'வான் பொருட் குன்றம் தொலைந்தது' என வருந்திய கோவலனிடம், சிலம்புள கொண்ம் என்னும் கண்ணகி வாக்கே சிலம்பு சிலப்பதிகாரத்தில் முதற்கண் தலைகாட்டும் இடமாம்!

சிலம்பு ஒலி செய்தலைச் சிலப்பதிகாரம்,

"சிலம்புவாய் புலம்ப"

என்கிறது. அஞ்சி அலமந்து ஓடுவாரை,

"நாபுரம் புலம்பிடச் சிலம்பு நொந்தழக் கோபுரந்தொறும் குறுகினார் சிலர்"

என்பார் கம்பர் (உயுத்3897).

இவற்றொடு தொல்காப்பியர், புலம்பே தனிமை' என்பதை நோக்க ஓர் உள்ளீடு புலப்படுகின்றது. சிலம்பு முதலாகச் சென்று கலன் ஈட்டத் செல்லும் கோவலன், ஒற்றைச் சிலம்பைப் பெற்றுச் செல்வானேன். ஒற்றை மிதியடி கேட்பாரார்? தருவாரார்? கண்ணகியார் சிலம்பு பயன்படுத்தார். பிறர்க்குத் தர நேரினும் ஒன்றைத் தாரார்; பெறார். பெறினும் பயனும் கொள்ளார்.

இணை பிரியா இரட்டை, இணை பிரித்து விற்கச் செல்லல் கோவலன் வரலாற்றில் அன்றி உண்டோ? கோவலன் விலையிடக் கொண்டு சென்றது ஒற்றைச் சிலம்பு எனின், களவு கோள்பட்ட சிலம்பும் ஒன்றாக இருந்தது ஏன்?

கள்வனுக்கு இரண்டில் ஒன்றை எடுக்க நேர்ந்தது என்ன?

எந்தக் கால் சிலம்பைக் கோவலன் விற்கக் கொண்டு சென்றானோ, அதே காற்சிலம்புதான் களவாக வேண்டுமா?

சிலம்புகளுள் வலக்கால் சிலம்பு, இடக்கால் சிலம்பு எனத் தனித்

தனி அமைப்பு உண்டு அல்லவோ, மிதியடியைப் போல!

மீண்டு வந்த சிலம்பு கண்டு, 'தன்தேவி சிலம் பென மன்னன் மயங்கலாம்! அதற்குடைய மாதேவியும் மயங்கிப் போய்த் தன் சிலம்பெனக் கொள்வாளா! கொண்டாளே எதனால்?

மன்னவன் தேவி அணி சிலம்பும், வாணிகன் தேவி அணி சிலம்பும் ஒத்ததென அமைய ஓரிடத்து ஒருவரால் செய்யப்பட்டதா? இல்லையே!

கோவலன் சிலம்பும் கோவேந்தன் சிலம்பும் முறையே புகள் நகரிலும், மதுரை நகரிலும் உள்ள வெவ்வேறு பொன் வினைஞர்களால் அல்லவோ செய்யப்பட்டவை.

உள்ளீடு பரல் புலப்படா தொழியினும், புறத்தோற்றம் கலைநிலை அளவுப்பாடு என்பனவெல்லாம் ஏன்?

பழிவழிப் படாஅப் பஞ்சவன் பழிக்கு ஆட்படவா இவை? அறவோர் அவையம், ஆயம், அமைச்சு என்பவை எல்லாம் எட்டாதொழியக், கரவே காவல் கடன் கொண்டது போலக் குற்றம் சாற்றியவனிடமே. 'கொன்றச் சிலம்பு கொணர்க' என ஏவ ஓர் ஊடல் தவிர்ப்புத் தானா இடமாக வேண்டும்?

இளங்கோவடிகள் சார்ந்த சமண் சமயப் பிறப்புக் கோட்பாடு வினைக்கோட்பாடு-ஈர்த்துச் செல்ல முன்னை வினை முடிச்சுப்போட்டு முடிக்கிறார்! ஊழ் என்பதனொடு வினை' என்பதை இணைத்த முதல்வர் முன்னவர்-இளாங்கோவடிகளேயாவர். அவர் நூலுக்கு முன்னை நூல்களில் ஊழ் என்னும் சொல் 96 இடங்களில் இடம் பெற்றிருந்தும், வினை ஒட்டவில்லை. அடிகள் ஊழ்வினை என இணைத்ததுடன், “ ஊழ்வினை வந்து உருத்து ஊட்டும்" என்று நூலியல் நோக்கையும் உரைத்தார். சிலப்பதிகாரம் என வல்லொற்றிட்டு அதிகாரப்படுத்தினார். ஏன்?

1.கோவலன் கொல்லப்பட்டான்.

2.பாண்டியன் தேவியொடு முடிந்தான்.

3.கண்ணகி விண்ணகம் சென்றார்.

4.மாதவியும் மணிமேகலையும் துறவு பூண்டனர்.

5.கோவலன் தாயும் கண்ணகி தாயும் இறந்தனர்.

6.கோவலன் தந்தையும் கண்ணகி தந்தையும் துறவு பூண்டனர்.

7. நற்றுணையாய் வந்த துறவு மூதாட்டி.

காவுந்தி ஐயை பாடுகிடந்து உயிர் துறந்தார்.

8.தெய்வக் கோலம் கண்ட ஆயர்முதுமகள் மாதரி,

எரிவளர்த்து இறந்தாள்

9. மதுரை எரியுண்டது!

10.பொற் கொல்லர் உயிர்ப்பலி ஊட்டினர்.

11. மாடல மறையோன் தீர்த்த யாத்திரை சென்றான்.

12.செங்குட்டுவன் தன்னொத்த வேந்தனுக்கு நேர்ந்ததெண்ணி நைந்தான்!

13. கனக விசயர் கதிர்த்தலை முடியைக் கல் நெரித்தது. 14.கங்கைப் போரில் செங்குருதி வழிந்தது!

ஒற்றைச் சிலம்பின் - ஆம்!

மென் சிலம்பின் விளைவுகளா இவை?

அச்சிலம்பின் கொடுமையை நெற்றிப்

பொட்டென இட்டுவைக்கவே

இளங்கோ வடிகள்

'சிலப்பதிகாரம்' எனப் பெயர்ச்சூட்டு

நிகழ்த்தினர் என்க.

சிலம்பு செய்த வன்கொடுமைகளையெல்லாம்

அகத் தடக்கிய முகக் குறியீடே

'சிலப்பதிகாரம்'

என்னும் பெயரீடாம் என்க.

*இது முந்தையர் கண்டதும் காட்டியதுமாம் வலிக்கும்வழி வலித்தல் ஆகாமல், வலியாவழி வலித்தல் எனப் பெயரீடு பெற வேண்டுவதாம்.

(செந்தமி அந்தணர் இரா.இளங்குமரனார் அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.)