இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 28 February 2026

தமிழ்நாடு முதல்வர் 73 வையைப்பதிப்பகம் தேனி

28-02-206
வையைப்பதிப்பகம் தேனி நாகலாபுரம் பதிப்பில் முனைவர் பெ.சித்ரா இளஞ்செழியன் அவர்களது தொகுப்பில் "தமிழ்நாடு முதல்வர் 73, தங்கப் பாப்பா" ஆகிய இரண்டு நூல்களும் திருச்சியில் காவேரி முத்தமிழ் சங்கமம் சார்பில் வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்த இந்த நிகழ்வுக்கு முன்னிலை வகித்தேன். 

தேனியில் இருந்து சுமார் ஐந்து 45 மணிக்கு கிளம்பி 9 40 மணிக்கு திருச்சி கருமண்டபத்தை அடைந்தேன். கருமண்டபத்தில் நற்றமிழ்ப் புலவர் பெருமகனாரும், ஐயா பிரகாசம் அவர்களும் அங்கு காத்திருந்தார்கள். மூவரும் காலை உணவை திருச்சி அசந்தா விடுதியில் முடித்துக் கொண்டு விழாவிற்கு சென்றோம். நிறைந்த தமிழ் உறவுகளை சந்திக்கின்ற விழாவாக அது இருந்தது. அதனைத் தொடர்ந்து கரியம்மால் கேசவன் ஐயா அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.  அவர் விடுதியில் இருப்பதாகச் சொன்னார். அந்த விடுதியின் பெயர் "ராக் வியூ லாட்ஜ்" இது திருச்சி தெப்பக்குளத்தில் இருக்கிறது.

கேசவன் ஐயா அவர்களுடைய நட்பு எனக்கு கிடைக்காத நாளில் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தேனியில் எனது அன்புக்குரிய போராளி பா.செந்தமிழன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வினுக்கு என்னுடைய ஆசான் செந்தமிழ் அந்தணர் அவர்களை அழைத்திருந்தேன். ஆதித்யா விடுதியில் தங்க வைத்தேன். அன்று மாலை நானும் வையைத் தமிழ் சங்கத்தின் துணைச் செயலருமான தம்பி மணிகண்டன், செந்தமிழன், அண்ணன் சித்தர் சிவா உள்ளிட்ட நண்பர்கள் பலரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக, இதழியல் தொடர்பாக, நிகழ்வு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தோம். இந்த பேச்சின் ஊடாக தவச்சாலை குறித்துப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. 

ஐயா அவர்களிடம் இருந்த தவச்சாலை அப்போது விற்பனை செய்யப்பட்டிருந்தது. தவச்சாலை பொறுப்புக்கு என்னை அழைத்தும் எனது சூழல் காரணமாக தவச்சாலை  பொறுப்பேற்று நான் நடத்த இயலாத நிலை குறித்தும் அன்றும் பேசினோம்.செந்தமிழ் அந்தணர் சொன்னார் "தம்பி என்னோடு இல்லை, தவச்சாலையும் என்னிடம் இல்லை" என்று.  இன்றும் அந்தச் சொல் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. "ஒரு நாள் அப்படி ஒரு தவச்சாலையை நிறுவுவேன்" என்று ஐயா அவர்களிடம் சொன்னேன். காலம் எப்பொழுது கணிக்கிறதோ தெரியாது. 

அன்று இரவு தேனி நிகழ்வு 9 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவுப் பயணம் சற்று சிக்கலாக இருக்குமே என்று வருந்தினார். காலையில் அவருக்குத் திருச்சியில் நிகழ்வு. "ஒரு சிக்கலும் கிடையாது ஐயா நான் உடன் வந்து உங்களை திருச்சியில் விட்டு விட்டு வருவேன்" என்று சொன்னேன். ஒன்பது மணிக்கு மேல் கிளம்பி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி நாங்கள் இருவரும் இந்த விடுதியை அடைந்த பொழுது மணி ஒன்றை நெருங்கி இருந்தது. அறையில் ஐயா அவர்களை விட்டுவிட்டு 15 நிமிடம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். இரவோடு இரவாக தேனிக்குக் கிளம்பி வந்து காலையில் பணிக்கு அலுவலகம் சென்றேன். 

அன்று இரவு நடந்து சென்ற அந்த விடுதி தான் "ராக் வியூ லாட்ஜ்". அந்த விடுதியின்உரிமையாளர்தான் கரியமால் கேசவன் ஐயா அவர்கள். அந்த விடுதியில் அறை எண் 115 என் ஆசனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் தான் வாழும் காலம் மட்டும் அவருக்கு வாடகை எதுவுமே இல்லாமல் கொடுக்கப்பட்ட அறை அது. நேற்று நானும் நற்றமிழ்ப் புலவர் பெருமகனாரும், பிரகாசம் ஐயா அவர்களும் சென்று சந்தித்தோம்.
விடுதியில் சுமார் 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கேசவன் ஐயா அவர்களுக்கான தனி அறையில் பெரும்பகுதியாக நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் நெடிய படிப்பாளர் என்பதற்கு அந்த நூல்கள் சான்று. இன்னொன்று நாங்கள் உள்ளே போகும்போது அவர் கம்பராமாயணத்தில் ஒரு பகுதியைப் படித்துக் கொண்டிருந்தார். முழுக்க முழுக்க பெரியார் சிந்தனையாளர். ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவேண்டிய நிலை இருக்கிறது. அதற்கு படிப்பே துணையாக நிற்கும் என்பது பலரும் அறியாதது. அறிந்திருந்தாலும் கடைப்பிடிக்காதது. அவ்வகையில் நெடிய நேரம் ஐயாவோடு இலக்கியங்கள் குறித்தும், செந்தமிழ் அந்தணரின் நினைவுகள் குறித்தும், உரையாடிக் கொண்டிருந்தோம்.

பின்பு நான் நெடுநாளாக தேடிக் கொண்டிருந்த அரிய நூல் ஒன்று அய்யாவிடம் இருந்தது. அது திருக்குறள் முதல் குறளுக்கு இருநூறு பக்கம் ஆய்வுரையாக இருந்தது அந்த நூல். அதை எழுதியவர் கோ.தண்டபாணிப் பிள்ளை அவர்கள். இப்படி ஒரு நூல் குறித்து எனக்குச் சொன்னது ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.  அந்த நூலை ஐயா அவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். அவர் சொன்னார் "நீங்கள் நூலகம் வைப்பதாக இருந்தால் சொல்லுங்கள் நான் ஆயிரம் நூல்கள் உங்களுக்குத் தருகிறேன்" என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் திருச்சிக்கு வந்தால் தங்குவதற்கு இடம் இல்லை என்று எண்ண வேண்டாம். செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களுக்கு ஒதுக்கியதைப் போலவே உங்களுக்கும் அறையை ஒதுக்கி கொடுக்கிறேன்க் நீங்கள் வரும்பொழுது சொல்லிவிட்டு வாருங்கள் என்று சொன்னார். பின்பு பிரியா விடை பெற்றுக் கிளம்பினோம். வ.சுப மாணிக்கம் ஐயா அவர்களுடைய மாணவர், குன்றக்குடிப் பெரியவரிடம் அணுக்கத் தொடர்பில் இருந்தவர். அறிவு கருவூலம் நற்றமிழ்ப் புலவர் பெருமகனார் அவர்களிடமும், பிரகாசம் ஐயா அவர்களிடமும் விடைபெற்று தேனியை இல்லத்தை அடைந்த  பொழுது மணி 9:30. 

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி

No comments:

Post a Comment