இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 29 November 2025

திருக்குறள் நெறியில் திருமணம்

மனிதநேய இல்லவிழா....
திருக்குறள் நெறியில் திருமணவிழா...

மணமக்கள் :
செல்வி க.சர்மிளா
செல்வன் : சா.பிரசாத்.

மனிதநேயக் காப்பகத்தின் முதல் திருமண விழா. தன் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையைச் சாதித்துக் காட்டிய மதிப்பிற்குரிய காப்பகத்தின் இயக்குநர் அண்ணன் பால்பாண்டி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்தும். தான் பெற்ற குழந்தையைப் படிக்க வைத்து, பணியில் அமர வைத்து, திருமணம் செய்விப்பவரைத் தான் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் தான் பெறாமல் பெற்ற குழந்தைக்கு ஒரு தந்தை என்னென்ன கடமைகள் செய்ய முடியுமோ அதை விடப் பன்மடங்கு மேலாகச் செய்து காட்டி இருக்கின்ற  மனிதநேயருக்குப் பின்புலமாக உள்ள மனித தெய்வங்களாம் உதவும் உள்ளங்களை வணங்குகிறேன். காப்பகத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு திருமண விழாப் பணியில் ஈடுபட்டிருந்தது இன்னும் சிறப்பு. எங்கள் காப்பகச் செல்வங்களை நெஞ்சார வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.  உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கல்வியாளர்கள், தேனி மாவட்டத்தின் முதன்மையான தொழில் முதலாளிகள், சாமான்ய மக்கள், பொதுநல அமைப்புகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த விழா.  வசந்தம் மகால் முழுமைக்கும் நிரம்பி வழிந்த கூட்டம், நிற்பதற்குக் கூட இடமில்லாமல் ஒரு மிகப்பெரிய திருவிழாவில் கூடிய கூட்டத்தை விட அதிகம். அவ்வளவு பெரிய கூட்டத்தை அரை மணி நேரம் கட்டி வைத்தது தமிழ். ஆம் அதுதான் திருக்குறள் வழியில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வு. தமிழ்நாடு முழுமைக்குமாக திருக்குறள் நெறியில் நானூருக்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்தி வைத்திருந்த பொழுதும் இந்த நிகழ்வு என்னை நெகிழ வைத்ததும் உருக வைத்ததுமான நிகழ்வாகவே பார்க்கிறேன். அனைவருக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்...

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுனர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
பேச : 9842370792
23-11-2025

தமிழ்க்கூடல் விழா ஒக்கரைப்பட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஒக்கரைப்பட்டி #அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற #தமிழ்க்கூடல் விழாவில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் (புலவர் ச.ந.இளங்குமரன்) கலந்து கொண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு உரை வழங்ககினேன். விழாவில் மாணவ மாணவிகள் 17 பேர் பேச்சு, கட்டுரை, ஓவியம் எனப் பல்வேறு விதமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தனர். அவர்களில் பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த வர்சிதா, மனிசா, பிரணிதா ஆகிய மூன்று மாணவிகள் விழா மேடையில் பேசினர். மொழி ஆளுமையும், எழுத்து உச்சரிப்பும், உடல் மொழியும், தமிழ் மொழியின் செறிவும்  நிறைந்து கிடந்தன. அந்தக் குழந்தைச் செல்வங்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் என்னுடைய நிறை வாழ்த்து. மேலும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகளும்,  வையைத் தமிழ்ச் சங்கம், தேனி   திருக்குறள் நூல்களையும் வழங்கி வாழ்த்தினேன். பின்பு ஒரு மாணவி அருகில் வந்து என்னுடைய தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு என்னோடு ஒளிப்படம் எடுக்க விரும்பினார். எடுத்துக்கொண்டோம். நான் மேற்கொண்டு ஏதாவது படிக்கின்ற பொழுது எனக்கான உதவிகள் செய்ய முடியுமா? என்று கேட்டார். படிப்புத் தொடர்பாக என்னால் இயன்ற உதவியினைக் கட்டாயம் செய்வேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முதுகலைத் தமிழாசிரியர் சுசீலா அம்மா அவர்களுக்கும், இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி.

இனிய அன்புடன் ச.ந.இளங்குமரன்.

Monday, 17 November 2025

தொல்காப்பியம் முற்றோதல்

16 11 2025 இன்று சிவகாசி அருகில் தனியார் கல்லூரியில் தொல்காப்பிய முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வையைத் தமிழ்ச்சங்கம் தேனி உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவை, அகில இந்திய சாதனைப் பதிவு புத்தக நிறுவனம், மதுரைத் தொல்காப்பியர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளிலிருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவி செல்வி ப.உமாகேஸ்வரி மிகச்சிறப்பாகத் தொல்காப்பியம் முழுவதையும் 144 நிமிடத்தில் முற்றோதல் செய்தார்.

செல்வி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அகில இந்திய உலக சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனம் சார்பில் உலக தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவைத் தலைவர் புலவர் ச.ந.இளங்குமரன், ஒருங்கிணைப்பாளர் சி.கலைவாணி ஆகியோர் இணைந்து "இளம் சாதனையாளர்" எனும் விருது வழங்கிச் சிறப்பித்தனர். நிறுவுநர் செ.வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றி. 

இந்த மாணவியை ஈராண்டு காலமாக உருவாக்கிய ஆசிரிய இணையர் திருமதி சான்சிராணி -  இராசசேகர் ஆகியோர் மிகவும் போற்றுவதற்குரியர். இவ்விணையர் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக ஆசிரியராகப் பணி செய்துவிட்டு இயல்பாக அவரவர் பணியைப் பார்க்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்து திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் முற்றோதல் எனத் தொடர்ச்சியாக மாணவச் செல்வங்களை உருவாக்கி வருவதோடு, அவர்களது முற்றோதலுக்கும் காரணமாக இருந்து உயரிய பரிசையும்  தங்களுடைய சொந்தப் பணத்திலிருந்து வழங்குவது நம்மை வியக்க வைக்கிறது,  மெய்சிலிர்க்க வைக்கிறது.  இவ்விணையருக்கு நெஞ்சம் நிறை வாழ்த்து. 

எங்களோடு தொல்காப்பியர் மன்றத் தலைவர் அ.இருளப்பன், பொருளாளர் சக்கையா செயலாளர் கரு.முருகேசன், வையைத் தமிழ்ச்சங்கத்தின் அரசியல் நாயகன் என் இளவல் பா.செல்வக்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

அனைவருக்கும் பேரன்பும் வாழ்த்தும். 

புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
தலைவர் உலக தொல்காப்பியச் சாதனையாளர்கள் பேரவை.