இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 26 April 2023

தெருவெங்கும் தமிழ் வளர்ப்போம் - கவிதை

தெருவெங்கும் தமிழ் வளர்ப்போம்.

ஆட்சிமொழிச் சட்டத்தில் தமிழும் உண்டு
ஆட்சியர்கள் தமிழாலே வளர்ந்த துண்டு
காட்சியிலும் ஆட்சியிலும் தமிழ்தான் இல்லை
கச்சியிலும் கல்வியிலும் தமிழே  இல்லை
பாட்டினிலும் பைந்தமிழைக் காண வில்லை
பாட்டெழுதும் ஏட்டினிலும் தமிழே இல்லை
வீட்டினிலும் வெளியினிலும் தமிழைக் காணோம்
வீழ்ந்தனையோ நீதமிழா எங்கே மானம்?

ஆண்டுகளோ ஒருபோதும் நிற்ப தில்லை
அகவையதும் அவ்வாறே மாற்ற மில்லை
ஆண்டவரும் ஆள்பவரும் தமிழைக் காவார்
அந்நியரும் அடிமையரும் அதுபோ லாவார்
மீண்டுமொரு புரட்சியொன்று தேவை இங்கு
மீட்டிடுவோம் தமிழ்த்தாயை சினந்து பொங்கு
மாண்புநிறை தமிழ்மக்காள் வாரீர் வாரீர்
மண்டுதமிழ்க் காத்திடுவோம் விரைந்து வாரீர்.

கற்றாரின் உள்ளமெலாம் களிப்புற் றாட
கவியருவி மனதுக்குள் கட்டற்  றோட
உற்றாரும் உறவினரும் உவந்து போற்ற
உலகாண்ட தமிழ்த்தாயின் உள்ளம் தேற்ற 
அற்றாரின் அழிபசியைத் தீர்க்கும் வண்ணம் 
அருந்தமிழை வளர்த்திடுதல் நம்மின் எண்ணம் 
வற்றாத வாரியெனத் திரண்டு வாரீர்
வண்டமிழைத் தெருவெங்கும் வளர்க்க வாரீர்!

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Wednesday, 12 April 2023

சொற்கள்

படிந்த சொற்கள்...

உதிர்ந்து கிடக்கின்றன
என்னைச் சுற்றி
இப்போதும் ...
கூரிய நகங்களோடும்
கோரைப் பற்களோடும்
சிலபல சொற்கள்!

சிலநேரங்களில் 
கைகள் உயிர்ப்புற்று
நீண்டு கூரிய நகங்கள்... 
குரல்வளையை நெறித்து
உடலெங்கும் கூறுபோட்டு
கூத்ததாடி மகிழ்கின்றன.
கீறல்களில் வழியும் 
குருதியோடு உடல்நனைக்க
வலியில் போரடி
அலரித் துடிக்கிறேன்!
சோர்வுற்று வீழ்கின்றன
சொற்கள்...!

என்னை அமைதிப் 
படுத்துவற்குள்...
உயிரோட்டத்தைத்
தடைசெய்யும் நோக்கோடு
குருதி நரம்புகளைக் 
கடித்துக் குதறி 
கொண்டாட்டம் போடுகின்றன
கோரைப் பற்கள்...

தளரா முயற்சி 
தன்னம்பிக்கை என
இரண்டின் துணையோடு 
மன அதிர்வுகளை 
மரணிக்கச் செய்கிறேன்
அச்சம் அகல்கிறது
நடுக்க்கம் தொலைகிறது

உதிர்ந்து கிடக்கும்
சொற்களின் தாக்கம்
உரமற்றுப் போகின்றன.
நான் உயிர்ப்புறுகிரேன்.

நமத்துப் போகின்றன
கூரிய நகங்களும், 
கோரைப்பற்களும்
என் அடுத்த நகர்வுக்கான
படிக்கற்களாய்...
மலர்ப்படுக்கையாய்...

ச.ந.இளங்குமரன்
13-04-2023

Sunday, 9 April 2023

எங்க ஆத்தா சொன்ன சொலவம் புத்தக மதிப்புரை.

மதிப்புரை
""""""""""""""""""

     ‌       "எங்க ஆத்தா சொன்ன சொலவம்" தலைப்பே மண்மணக்கிறது. நூலைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.

             திருக்குறள், ஆத்திசூடி,கைக்கூ போன்ற கவிதைகள் வடிவம் குறுகியது எனினும் அவை வழங்கும் பொருள் விரிந்தது.

             அத்தகைய தன்மை உடையவைகளே சொலவங்கள் என்றால் அது தவறாகாது.

             1800 க்கும் மேற்பட்ட (சொலவடைகள் ) சொலவங்களைத் தேடித் தொகுத்து நூலாக்கியிருப்பது சிறப்பாகும்.

             என்னவோ! சொலவம் சொன்ன கணக்கா "சொல்றது சுலபம் செய்யுறது தான் கடினம்" அப்படி ஒரு கடினமான பணியை அழகாகச் செய்திருக்கும் நூலாசிரியர் கவிஞர் அ.பாண்டிய மகிழன் அவர்களைப் பாராட்டலாம்.

              சொலவங்களை யாரும் சுலபமாக எண்ண வேண்டாம், அதை இந்த நூலிலுள்ள ஒரு சொலவத்தாலயே சொல்கிறேன்,"சிற்றுளியால் மலையே பிளக்கும் "அதாவது,சிறிய சொலவம், எவ்வகை பெரிய உண்மையையும் மிக எளிதாக விளக்கும் ஆற்றல் உடையதாகும்.

            இத்தகைய சொலவ நூலை, தேனி வையை பதிப்பகம் வாகாகப் பதிப்பித்திருக்கிறது.அழகான அட்டைப்படமும் கண்கவர்கிறது.

            நம் வீட்டு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று.அனைவரும் அடிக்கடி வாசித்தால் சிறப்பு உண்டு.

           வாழ்க! வளர்க! நூலாசிரியரின் தமிழ்த்தொண்டு! பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

                          கலைச்சுடர்மணி 
                       ம.கவிக்கருப்பையா