இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 27 December 2021

திருக்குறள் சொல்போட்டி

மாநில அளவிலான திருக்குறள் சொல் போட்டி....

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ் கூடல்" சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தேனி, கோவில்பட்டி, இராசபாளையம், ஒட்டன்சத்திரம், கோவை சென்னை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிகாரத்தின் பெயர் சொல்லி திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறளின் முதல் அல்லது கடைசி வார்த்தையை சொல்லி அதற்குரிய குறளைச் சொல்வது, வரிசை எண்ணைக் கூறி அதற்கான திருக்குறளை ஒப்புவித்தல் என பல வடிவங்களில் 6 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டியில் இராசபாளையத்தை சேர்ந்த பாலகுமாரா, தேனி மாவட்டம் போடியை சேர்ந்த அபிநயா, கோவையைச் சேர்ந்த தேஜஸ் ஸ்ரீராம் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியினை கவிஞர் லட்சுமி குமரேசன் கவிஞர் செல்வராணி ஆகியோர் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். புலவர் ச.ந.இளங்குமரன், தமிழ்ச்செம்மல் முத்துமணி,  புலவர் இராசேந்திரனார் ஆகியோர் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியாற்றினர். நிகழ்வின் முதல் மூன்று பரிசினை எழுத்தாளர் முத்துக்கிருட்டிணன், புலவர் இராசேந்திரனார் ஆகியோர் இணைந்து வழங்கினர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசினை செந்தமிழ் தேனீ ஜெயராமனார் வழங்கிச் சிறப்பித்தார்.  நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வினை வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும், உலகத்தமிழ்க் கூடல் அமைப்பாளருமான புலவர் இளங்குமரன் இணைய வழியில் ஒருங்கிணைத்துச் செயலபடுத்தினர். நிகழ்வு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

முதல்இடம் பெற்றவர் - பாலகுமரா- இராசபாளையம் 
பரிசு உரூ 600 மற்றும் சான்றிதழ்

இரண்டாவது இடம்-  அபிநயா தேனி பரிசு 500/- மற்றும் சான்றிதழ்

மூன்றாவது இடம்-  தேஜஸ்ஸ்ரீராம்
கோவை உரூ -400 மற்றும் சான்றிதழ்

நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு / 100/- பெறுகிறார்கள்

பரிசு வழங்கியவர்கள்
 திரு . முத்துகிருட்டிணன் - 1000/-
புலவர் ராசேந்திரனார் - 500/-
செந்தமிழ்த்தேனீ - அனைவருக்கும் 100 ஊக்கப் பரிசு வழங்குகிறார்கள்.

அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன் நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி
அமைப்பாளர் 
உலகத் தமிழ்க்கூடல்

Sunday, 26 December 2021

சிறுகதை

நூல்:- சொர்க்கத்தில் சில காலங்கள்.
நூல்வகை :- சிறுகதை
நூலாசிரியர்:- காசி ஆறுமுகம் 
வெளியீடு:- பைந்தமிழ் இலக்கியப் பேரவை.
விலை :- 100.

 உலகப் பரப்பில் எல்லா நாடுகளிலும், எல்லா மக்களிடமும் வாய்மொழியாகவே காலங்காலமாகக் கதைகள் சொல்லப்பட்டு வந்திருப்பதை பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

மனிதகுல வரலாற்றில் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதற்காகவும், ஓய்வு நேரங்களில் சக மனிதர்களோடு உரையாடவும், குடும்ப உறுப்பினர்களோடு கொஞ்சிக் குலவி சிரித்து மகிழவுமான பொழுதுபோக்கு நிகழ்வே நாளடைவில் கதையாக வளர்ந்திருக்கிறது. தான் பார்த்த ஒன்றை, கேட்ட ஒன்றை, தான் பார்த்ததைப் போலவே, கேட்டதைப் போலவே பிறர் விரும்புமாறு காட்சிப்படுத்தி உரைப்பது கதையாகும்.

இன்றும் குழந்தைகளுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ கதை சொல்லத் தொடங்கும் போது "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்..." என்று தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. கதைகளில் பொய்க்கதை, பழங்கதை புனைகதை, கட்டுக்கதை என பல வடிவங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு கதை சொல்வது. "பாட்டி சொன்ன கதை" இன்றும் சிற்றூர்ப் புறத்தில் வழக்கில் இருந்துவருகிறது. தற்காலத்தில் சிறுகதை என்பது எழுத்துலக வரலாற்றில் பிரிக்க முடியாத ஒன்றாக, தவிர்க்க முடியாத ஒன்றாக வளர்ந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சி மிக்க நாடு என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் கூட சிறுகதை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

அவ்வகையில் சிறுகதை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வருவதோடு, அவர்களது வாழ்வியல் விழுமியங்களை எதிரொளிக்கும் காலக் கண்ணாடியாகவும் மிளிர்கிறது. 

"சொர்க்கத்தில் சில காலங்கள்" என்னும் தலைப்பிலான இந்நூல் 12 சிறுகதைகளை உள்ளடக்கியது. முழுமைக்கும் நெல்லை மாவட்ட மக்களின், குறிப்பாக மண்மணம் மாறாத சிற்றூர்ப்புற மக்களின் வாழ்வியலைச் செம்மையாகப் பதிவு செய்திருக்கிறது. பெரும்பான்மையான சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளவைகளாக இருக்கின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கில் இருந்த புழங்கு சொற்கள் இந்நூலில் ஒவ்வொரு கதையிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 

"சொர்க்கத்தில் சில காலங்கள்" இந்நூலின் ஆசிரியர் காசி ஆறுமுகம், இவர் பொறியாளர் படிப்பை நிறைவு செய்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். கவிதை, சிறுகதை எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இவர் படிப்பவர் உள்ளம் கொள்ளுமறு சுவை குறையாமல் 12 சிறுகதைகளையும்  கொடுத்திருப்பது மிகவும் பாராட்டுதற்குறியது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு சிற்றூர்ப் புறத்திலும் மருத்துவச்சிகள் இருந்தார்கள். அங்கு பேறு காலம் என்பது இயற்கையாகவே நடந்தது. அறுவை சிகிச்சை முறைகள் இல்லை. இப்படி  நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்குப் பேறுகாலம் பார்த்த மருத்துவச்சிகள் வாழ்வு அவர் வாழும் காலத்திலேயே மதிக்கப்படவில்லை. 

ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கிற இந்தக் காலகட்டத்தில் பேறு காலம் என்பது பெரும்பாலும் மருத்துவமனையில் தான் நடக்கிறது. பெரும்பான்மையான பேறுகாலம் அறுவை சிகிச்சையில் தான் நடக்கிறது. நமது சிற்றூர்ப் புறங்களில் மருத்துவச்சிகள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களைப் புரந்து, அவர்களிடம் இயற்கை மருத்துவ முறைகளைக் கற்றுக் கொள்ளாமலும், அதனை விட்டதன் விளைவாகவும், செயற்கை முறையிலான மேல்நாட்டு மருத்துவத்தைப் பின்பற்றியதன் விளைவாகம் நம் நாட்டு மக்கள் தாயையும் சேயையும் புதைகுழிக்குள் தள்ளி வருகின்றனர் என்ற நிலையை பல நூறு "பிள்ளைகளைப் பெற்றவள்" என்ற கதை மூலம் மிகத் தெளிவாக படம் பிடிக்கிறார் நூலாசிரியர்.

மனிதன் நாகரிக வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகின்ற இன்றைய நிலையிலும், தன்னுடைய முதன்மையான வேட்டைத் தொழிலை விட்டபாடில்லை,  என்றாலும் தற்போது விலங்குகளை வேட்டையாடுவதைத் தாண்டி சக மனிதனை வேட்டையாடும் நிலைக்கு மனிதன் மாறி கிடக்கின்றான். இப்படியான சூழலில் வேட்டைத் தொழிலில் தான் செய்த வேலையால் தாயும் சேயும் துடிதுடித்துச் சாவதைத் தன் கண்முன்னால் கண்ட பின்பு நிறைமாதக் கர்ப்பிணியான தனது மனைவி நினைவுக்கு வர அன்று முதல் வேட்டையாடுகின்ற தொழிலை விட்டு விடுகின்றான் என்ற இரண்டாவது கதையின் மூலமாக "எவன் ஒருவன் பிற உயிர்களைத் தன் உயிர்போல் கருதுகின்றானோ, அப்போதே அவனுக்குள் மனிதம் விழித்துக் கொள்கிறது"  என்று பதிவு செய்வது சிறப்பு.

மனித வாழ்வியலில் பண்டைய விழுமியங்களை, கலை கலாச்சாரங்களைச் சேமித்து வைத்திருக்கின்ற கருவூலங்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியோர்கள் திகழ்கின்றனர்.  அவர்கள் சேமித்து வைத்திருந்த கருவூலங்களே எதிர்காலத் தலைமுறையினரைச் செப்பம் செய்திருக்கின்றன. அந்தக் கருத்துக் கருவூலங்களில் ஒன்றுதான் கதை. கதை கேட்டுக் கதை கேட்டு வளர்ந்த மக்கள் தான் அதிகம். அவர்களே வீரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர் என்பது வரலாறு.

இன்றைக்கு எந்தக் குடும்பத்திலும் கதை சொல்லுகின்ற பாட்டிமார்கள் இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு பெரியவரை நாம் இழக்கிறோம் என்றால், அந்தக் குடும்பத்தின் வரலாறான நூலகத்தை நாம் இழக்கிறோம் என்பது பொருள். இதனை மூன்றாவது கதையில் அருமையாகல் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

"சமூகத்தில் சமையல் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் நல்ல நண்பர்களது வாழ்வியல்"
 "பீடி சுருட்டு என்ற தொழிலைச் செய்து வருகின்ற ஏழை குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைகளைப் பொறியாளர் நிலைக்கு உயர்த்துவதற்காக பெற்றோர்களது கடின உழைப்பு"
"ஊரெங்கும் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள், மனித வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பழகிய உறவு முறைகள், குடும்ப விழாக்கள் என அனைத்தையும் தொலைத்துவிட்டு கைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றில் தன்னை புதைத்துக் கொண்டு, தனக்குத் தானே தனிமையில் பேசிக் கொண்டிருக்கின்ற அவலநிலை"
மது என்னும் அரக்கன் பட்டிதொட்டியெல்லாம் புகுந்து மனித மனங்களை சீரழிப்பது தொடர்பாக"
ஊரெங்கும் உள்ள உறவு முறைகளில் யார் மனமும் நோகாமல், திருடு போன்ற சிறு சிறு தவறுகளையும் சரிசெய்ய அவர்கள் கடைப்பிடித்த நெறிமுறைகள் " 
காலந்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் ஊறிக்கிடக்கும் நம்பிக்கைகள் "
அறிவியல் வளர்ச்சியில் தற்பொழுது காலத்தால் மறந்துபோன மழைக் கஞ்சி விழா, எடுத்த சமூகத்தில் மழையைத் தள்ளிப்போக பிள்ளைகள் பாடும் பாட்டு"
'ரெயின் ரெயின் கோ அவே'
" விரும்பியது கிடைக்கவில்லை என்றால் அது ஏக்கமாக மாறி அவனுக்கு காய்ச்சலை உண்டாக்கி விடும் என்ற சமூகத்தில் இருக்கின்ற நம்பிக்கைகள்"
"தொழிலைப் பெருக்குவதற்காக கையிருப்பு இல்லாத சூழலில் வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட முடியாமல் நின்ற அப்பாவிகளின் நிலை" "உழவர்களின் நண்பனான தேவாங்கு" என சமூகம் தொலைத்துச் சென்ற பலவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முகமாக,  ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து மண் மனம் மாறாத மக்கள் மொழியில் பதிவு செய்திருக்கின்ற கவிஞர் சிறுகதை ஆசிரியர் காசி ஆறுமகம் அவர்களை பாராட்டுகிறோம்.  

இந்தச் சிறுகதைகள் நூலாக்கம் தொடர்பான பணிகளை முன்னெடுதிருக்கின்ற பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் பாசத்திற்குரிய மகன் அதிவீரபாண்டியன் அவர்களை வாழ்த்துகிறோம்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Sunday, 5 December 2021

தேனீக்கள் அறக்கட்டளை விழா

தேனிக்கள் அறக்கட்டளை இரண்டாமாண்டு தொடக்கவிழா!

தேனீக்கள் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில்  கூடியிருக்கின்ற அவையோர் அனைவருக்கும் தேனி வையைத் தமிழ்ச் சங்கத்து இளங்குமரனின் இனிய வணக்கம். 

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தனித்தனியே இயங்கி கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து, தேனி மாவட்ட அளவிலான ஒரு மிகப்பெரும் எழுச்சியை உண்டாக்கி இருக்கின்ற தேனீக்கள் அறக்கட்டளை செயல் வீரர்களையும், ஜெயம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கச் செயல் வீரர்களையும்,  வின்னர் ஸ்போர்ட்ஸ் குழுவினரையும் மிகுந்த மகிழ்வோடு நிறைந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

பொதுவாக உலக வரலாற்றில் பெரும்பான்மையான இடத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பதுதான் பேருண்மையாகு.  இது கடந்த காலமாக இருந்தாலும் சரி, தற்கால மாக இருந்தாலும் சரி எக்ககாலத்திற்கும் பொருந்தும்.

இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்கு கொடுத்தவர்கள் மாற்றுத்திறனாளி களாகவே இருந்திருக்கின்றனர்.  இசை தொடர்பான நுணுக்கங்களை கொடுத்தவர்களும் மாற்றுத்திறனாளிகள். மேலும்  உலக நாடுகளை யெல்லாம் வென்று, ஒரு குடையின் கீழ் ஆள நினைத்து, போர் தொடங்கி பெரும் வெற்றியைப் பெற்ற பேரரசர்கள் பலரும் மாற்றுத்திறனாளிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாமஸ் ஆல்வா எடிசன்,  கெலன் கெல்லர், பீதோவான், அலெக்சாண்டர், கிட்டலர் என பல வரலாற்று நாயகர்களைப் பற்றி விளக்கிச் சொன்ன்னால் நேரம் நீளும்  எனவேதான் மேலோட்டமாகவே சொல்லிச் செல்கிறேன். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் என் உரையை நிறைவு செய்ய வேண்டும். நிறைவு செய்வேன்.

இன்றைய காலத்தில்  சக்கர வண்டியில் உட்கார்ந்து கொண்டு உலகின் பெரு வெடிப்புக் கொள்கை குறித்து பேசியவர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர். அதைப்போல உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டிற்கு தங்கப்பதக்கம் தேடித்தந்த மாரியப்பன் மாற்றுத்திறனாளி. தற்பொழுது எனக்கு முன்பாக வெங்கட்பூபதி அய்யா அவர்கள் பேசினார். அவர்களுடைய அறக்கட்டளையில் இருந்து பயிற்சி பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான கூடைப்பந்துப் போட் டியில் குறிப்பாக இந்திய அளவிலான போட்டிக்குத் துணை தளபதியாக இருந்தவர் நம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை பெருமையோடு பகிர்கிறேன்.

இப்படி திறன் மிக்கவர்கள் பலரும் நமது தேனி மாவட்டத்தில் இருப்பது நமக்குப் பெருமை. நான் அறிந்தவரையில் அங்கங்கே சில போட்டிகள் நடைபெற்றது மாற்றுத் திறனாளிகளுக்காக. ஆனால் இன்றைக்கு பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாற்றுத்திறனாளிகளை கலந்து கொள்ளச் செய்து அவர்களுக்கான போட்டியை நடத்தி வென்றவர்களுக்கு மட்டுமல்ல, கலந்து கொண்டவர்களுக்கும் பரிசு வழங்கும் பெரும் முயற்சியை, பெரும் ஊக்கத்தை வழங்கி இருக்கின்ற தேனீக்கள் அறக்கட்டளை நண்பர்களையும் அதன் செயல் வீரர் களையும் மீண்டும் வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
உலகப் பேராசான் சொல்வார் "

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி"

என்று சொல்வார் உடலில் அக உறுப்புகளும், புற உறுப்புகளும் மிகச் சரியாக இருந்தும் பயனில்லை அக உறுப்பாகிய கண்ணுகுத் தெரியாத மனமென்னும்  உறுப்பும் மனத்தின் உள்ளுறுப்புகளான தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அப்படிச் சரியாக இருந்தால் மட்டுமே, இருப்பவர் மட்டுமே மட்டுமே இந்த உலகில் சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்தச் சாதனைகளை மாற்றுத் திறனாளிகள் மிகச் சரியாகச் செய்து வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் நமது உலகப்பேராசன் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாக இருக்கின்றனர் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். புற உறுப்புகளும், அக உறுப்புகளும் மிகச்சரியாக இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் சாதிக்காத பலவற்றையும் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகின்றனர். 

சாதாரண மனிதர்களிடம்  புற உறுப்புகள் நன்றாக இருந்தாலும் கூட, மனத்தின் உள்ளுறுப்பான விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் ஊக்கமும் தொடர் பயிற்சியும் இல்லாத நிலை பலருக்கு இருக்கிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகள்  இவற்றைச் சரியாக இயக்குகின்றனர் அல்லது மாற்றுத்திறனாளிகளால் சரியாக இயக்கப்படுகிறது. அந்த இயக்கமே அவர்களுக்கான வெற்றியாக வளர்கிறது என்பது வரலாற்று நெடுகிலும் அறியக்கிடக்கின்ற உண்மையாகும்.

இன்றைக்கு தேனி மாவட்டத்தில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள, அவர்களை  உலகம் அறிந்துகொள்ள ஊக்கப்படுத்தி வருகின்ற தேனீக்கள் அறக்கட்டளை தலைவர் பாண்டி, செயலர் அழகேசன், பொருளாளர் எமது அன்பு மகன் போட்டோ பாண்டி உளிட்ட அனைவரையு, மற்றும் தோழமை அமைப்பினரையும் பாராட்டுவதோடு, வாழ்த்துவதோடு இன்னொரு செய்தியையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

அதாவது இன்று உலகப்பேராசன் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களையும் 29 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை படைத்து இருக்கின்ற இரட்டையர்கள் முத்தமிழ்சாமினி, செந்தமிழ் சாலினி ஆகிய இருவரும் நம்மோடு இதே மேடையில் இருக்கிறார்கள். திருக்குறள் தொடர்பான உலகச் சாதனை வரலாற்றில் தேனி மாவட்டத்திற்கு ஒரு மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்திருக்கின்ற இந்த குழந்தைகளை தேனீக்கள் அறக்கட்டளை பாராட்டுவது மகிழ்வுக்கும், போற்றுதலுக்கும் உரியதாகும்.

நமது இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இருக்கின்ற கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதிப்பிற்குரிய இராமகிருட்டினன் ஐயா அவர்கள் இந்த குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டுமாய் தேனீக்கள் அறக்கட்டளையின் சார்பாகவும்,  தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

ஐயா கம்பம் இராமகிருட்டினன் அவர்களோடு ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் பல்வேறு அரசியல் காலங்களில் களப்பணிகள் செய்திருக்கிறேன். அன்று என் அரசியல் தலைவன் புரட்சிப்புயல் வைகோ அவர்களது அமைப்பில் ஒருவனாக.

தற்போது தொடர்ந்து இன்றைக்கு வையை தமிழ் சங்கத்தின் நிறுவனராக இந்த மேடையில் பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். அருமையான விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கு. தேனீக்கள் அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்துத்  தோழமைகளுக்கும்  தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றி கூறி எனது வாழ்த்துரையினை நிறைவு செய்கிறேன்.  நன்றி

வாழ்க வள்ளுவம்! வாழ்க வையகம். 
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.