இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 11 December 2015

கடலூர் வெள்ள நிவாரணப் பணி



கடலூர் வெள்ள நிவாரணப் பணி....
மனிதநேயக் காப்பகம் தேனி ஒருங்கிணைப்பில், வையைத் தமிழ்ச் சங்கம் நாகலாபுரம்-தேனி, பிரஸ் மீடியா கிளப், விஜய் மக்கள் இயக்கம், அஜீத் ரசிகர்கள், முன்னாள் ரானுவத்தினர், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இனைந்து பெருமழையால் பதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட்கள் சேகரித்தனர்.
  தேனி மாவட்டத்தில் தொண்டுள்ளம் கொண்டவர்கள் கருணாகரன் ஆயில்மில், மோனார்க் இன்டஸ்ட்ரியல் (பி) லிமிடெட், பலசங்கா பருப்பு மில், ஏ.எம்.ஆர்.பருப்புமில், கனரா வங்கிப் பணியாளர்கள், லெட்சிமிபுரம் இளைஞர் சங்கத்தினர், அன்னஞ்சி நண்பர்கள், ராசிங்காபுரம் பொதுமக்கள் ஆகியோர் பெருங்கொடையென நிவாரணப் பொருட்களை வழங்கி உதவினர்.
      அதோடு தேனி மாவட்டப் பொதுக்மக்களும் தங்களால் இயன்ற அளவில் நன்கொடைப் பொருட்கள் ஈந்து சிறப்பித்தனர். தேனி மாவட்ட ஆட்சியர் திரு வெங்கடாசலம் அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப 07-12-15 ஆம் நாள் இரவு  சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை 3 லாரிகளிலும், 1 வேனிலும் ஏற்றிக்கொண்டு எமது அமைப்பு சார்ந்த நண்பர்கள் நேரடியாக கடலூர் மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் பெருமழையால் பாதிப்படைந்த கோதண்டராமபுரம், பூச்சிமேடு, மேட்டுப்பாளையம், தியாகவள்ளி, ஆண்டிக்குப்பம், கொத்தவாச் சேரி, பூவாலிக்குப்பம், தானுறு, கரப்பாடி, புதுக்குப்பம், பூவாழை,தண்டுக்காரன் மேடு, உப்பங்கழி, காரைமேடு உளிட்ட 21 கிராமங்களுக்குச் சென்று நிவராணப் பொருட்களை நேரடியாக வழங்கினர்.  
     மக்கள் துயர் துடைக்கும் மனிதநேயப் பணியை முன்னெடுத்த தேனி மனிதநேயக் காப்பகம் உள்ளிட்ட அனைத்து தோழமை அமைப்புகளுக்கும், நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிறுவனத்தினருக்கும், பொதுமக்களுக்கும், தேனி நாகலாபுரம் வையைத் தமிழ்ச் சங்கம் தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை காணிக்கையாக்கி மகிழ்கிறது.
    


Thursday, 1 October 2015

வெற்றிக்கு வழி! புலவர் ச.ந.இளங்குமரன்


வெற்றிக்கு வழி

            எனக்கு நேரமே சரியில்லை, எதத் தொட்டாலும் உருப்பட மாட்டேங்குது. எடுத்த தெல்லாம் தோல்வியிலேதான் முடியுது.” என்று நம்மில் பலரும் புலம்புகின்றோம். இதை நாம் சிந்திக்கவேண்டும். நம்மின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்கள் என்னவென்று நாம் சரியாகப் புரிந்துகொண்டு அதை நீக்கிவிட்டோமென்றால் நமக்கான வெற்றி மிக எளிதாகிவிடும்.

       ஒரு செயலைச் சிறப்பாக செய்து முடிப்பதையும், நம்மின் குறிக்கோளை, இலக்கை சரியாகச் சென்று அடைவதையும் நாம்வெற்றிஎன்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். அதுவும் குறைவான காலத்தில், குறைவான உழைப்பில், குறைவான முயற்சியில், குறைவான பொருட்செலவில் நாம் பெறும் வெற்றியை நாம் மிகச் சிறப்பான வெற்றியாகக் கருதுகின்றோம். எனவே வெற்றிக்கான மூலத்தையும், தோல்விக்கான காரணத்தையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது கட்டாயமாகிறது. இதில் தோல்விக்கான காரணங்களைக் களைவதே வெற்றிக்கான படியாக, பாதையாக அமைகிறது.

         நாம் செய்கின்ற செயலைச் சரியான திட்டமிடுதலோடு தொடங்கினால் அச்செயல் வெற்றியாக முடிகிறது. சரியான திட்டமிடுதல் இல்லாமல் தொடங்கப்படும் செயல்கள் தோல்வியில் முடிவதற்கு பெரிதும் வாய்ப்பாக அமைகிறது என்பது உளவியல் அறிஞர்களின் கருத்தாகும்.

       எனவே நாம் நம்மின் இலக்கை, குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே தயார்ப்படுத்தி வைத்திருக்கவேண்டும். தயார்நிலையில் இருக்கும்போது கிடைக்கும் சரியான வாய்ப்பினை தவறாது பயன்படுதவேண்டும். அப்படிப் பயன்படுத்டும்போது நமக்கான வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

       தயார்நிலை + வாய்ப்பு = வெற்றி

       தற்பொழுது நாடெங்கும் போட்டித் தேர்வுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. போட்டித் தேர்வு என்பது போட்டியாளர்களுக்குக் கிடைக்கும் பொதுவான வாய்ப்புதான். என்றாலும் எந்தப் போட்டித் தேர்வாளன் அன்றாடம் படித்து தேர்வினைச் சந்தித்து வெற்றிபெற தன்னைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றானோ அவன் வெற்றி பெறுகின்றான். தன்னைச் சரியாகத் தயார்ப்படுத்திக் கொள்ளாத ஒருவனால் வெற்றிபெற முடியாது.

          தேர்வாளனின் இலக்கு தன் வாழ்வியல் தேவைக்கான வேலையைத் தேடிக்கொள்வது. அதற்கான திட்டமிடல் தேர்வுக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வது. தேர்வுக்காலம் வாய்க்கும்போது சரியாகப் பயன்படுத்துவது இவை தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளாகும்.

        இடம் வாங்கவேண்டும், பொருள் வாங்கவேண்டும், நிலம் வாங்கவேண்டும், மனைவாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடைய ஒருவன் முதலில் அதை வாங்குவதற்கான பொருளை சேமிப்பதற்கான திட்டத்தை முதலில் வகுக்கவேண்டும். திட்டத்தின் அடிப்படையில் சிறுகச் சிறுகப் பொருளைச் சேமிக்கப் பழகவேண்டும். பொருள்நிலையில் தன்னைத் தயார்ப்படுத்திகொண்ட பின்பு சரியான  வாய்ப்பு வாய்க்கும்போது வாய்ப்பினைத் தவறாது பயன்படுத்தும் ஒருவன் தன்னின் குறிக்கோளில் வெற்றி பெறுகிறான்.

              குறிக்கோள்,  குறிக்கோளை அடைவதற்கான திட்டமிடல், திட்டமிடலின் அடிப்படையில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளுதல், தான் தயார் நிலையில் இருக்கும்போது கிடைக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவை வெற்றியின் சூதிதிரமாக அமைகிறது.

      இந்த சூத்திரத்தைச் செயல்படுத்துவதற்கான மூலதனம் முயற்சியும், பயிற்சியும் மட்டுமே. எடுத்ததற்கெல்லாம் இலவசத்தையே விரும்பும் நாட்டில் முயற்சி செய்வது கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் முயல்க. வெல்க.

Thursday, 1 January 2015

தமிழறிஞர் புலவர் ச.ந.இளங்குமரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பார்வையில்...

    புலவர் ச.ந.இளங்குமரன் (ந.பாலசுப்ரமணி) நல்ல தமிழறிஞர். இவர் தனது சொந்த ஊரான நாகலாபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் மன்றத்தின் செயலர் மற்றும் பொறுப்பாளராகவும், வையைத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி அதன் நிறுவுநர்-செயலராகவும் செயல்பட்டு வருகிறார்.
     கடந்த 18 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசளித்து வருவதோடு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு மரபுக் கவிதை எழுதப் பயிற்சி வழங்கியும், பள்ளி,கல்லூரி மற்றும் பிற அமைப்புகள் நடுத்துகின்ற பல்வேறு போட்டிகளுக்கு நடுவராகவும் செயல்பட்டு வருவதோடு மேடைப் பேச்சாளராகவும் விளங்குகிறார்.
    தமிழகம் சார்ந்த கவிஞர்களில் பிற சொல் கலவாத தனித் தமிழில் கவிதை எழுதுவோர் 10 பேருக்கு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
     பல்வேறு தமிழ் அறிஞர் பெருமக்களின் புத்தகங்களை வெளியிட்டும், அறிமுகம் செய்தும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதும், பாராட்டும் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
     திருக்குறள் முற்றோதல் செய்தும், திருவள்ளுவருக்குச் சிலைகள் நிறுவியும், திருக்குறளை முன்னிலைப்படுத்தி குறள்நெறி தமிழ்த் திருமணங்கள் செய்வித்தும் வருகிறார்.
    பல தரதப்பட்ட வார, மாத, இலக்கிய இதழ்களிலும், இணையத்திலும் பல்வேறு வலைதளங்களிலும் கவிதை,கட்டுரை,சிறுகதைகள்,எழுதியும் வருகிறார்.
    தமிழகம் சார்ந்துள்ள பல்வேறு கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து கூட்டுக் கவிதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்,
      மூன்று நூல்களின் தொகுப்பாசிரியராக விளங்கும் இவர் "தமிழ் என் போர்வாள்" என்னும் கவிதை நூலின் மூலம் நூலாசிரியராகவும் விளங்குகிறார்.
   தற்பொழுது இவரின் "கொலை வாளினை எடடா" என்ற கவிதை நூலும், இன்பத்துள் இன்பம் காமம் என்னும் திருக்குறள் இன்பத்துப்பால் குறித்த ஆய்வு நூலும் அச்சாகிக் கொண்டிருக்கிறது.
    புலவர் இளங்குமரன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாகச் செய்து வரும் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல பரிசுகளையும், பட்டங்களையும், விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.
   இவரின் சிறந்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டி எங்களது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இவருக்கு தமிழ்மொழிச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
அன்புடன் 
ஆய்வியல் நிறைஞர் கா.உதயசூரியன், எம்.ஏ,.எம்,பில்,.
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
7/1 இரயில்வே ஸ்டேசன் சாலை, 
தேனி-625531
    

த.மு.எ.க.ச.பார்வையில் புலவர் ச.ந.இளங்குமரன்

திரு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள், தேனிமாவட்டம் நாகலாபுரத்தில் வையைத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி தேனியில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறார். இவர் மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளர். சிறந்த திறனாய்வாளர், மரபுக் கவிதை,சிறுகதை, கட்டுரைகள்,இலக்கிய சொற்பொழிவு உள்ளிட்ட பல தமிழிலக்கியத் தளங்களில் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருபவர்.
    மாவட்டம் மட்டுமல்லாது மாநில அளவில் தமிழ், தமிழ்மொழி சார்ந்த சமூகப்பணி செய்பவர்களில் இவரும் பரவலாகப் பேசப்படுபவர்.
தமிழ்மொழி,தமிழ்சமூகம்,தமிழ் இலக்கியம் சார்ந்த நடுவங்களில் குறிப்பிட்டுக் காட்டும்படியாக
1) பல ஆண்டுகளாக பள்ளி மாணவ மாணவியருக்கு தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி வருவது 
2) குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி வருவதோடு, தங்களின் பெயருக்கு முன் தலைப்பெழுத்தை தமிழிலேயே எழுத வலியுறுத்துவது. 
3) திருக்குறளை முதன்மைப்படுத்தி தமிழ்நாடெங்கும் பல ஊர்களில் தமிழ்த் திருமணங்கள் நடத்துதல், 
4) நூல்கள் எழுதுதல், சக எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தல்,
5) தமிழ்நாடெங்கும் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள், அறிஞர்கள் ஆகியோர்களுக்கு சமூக நல ஆர்வலர்களுக்கும் பரிசுகள், பட்டங்கள், விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துதல்.
6) தமிழ் அறிஞர்களுக்கு விழா எடுத்தல் என பல எண்ணற்ற பணிகளைச் செய்து வருதல்.
       நேரிய சிந்தனையோடும், உணர்வாற்றலோடும், கெழுமிய முனைப்போடும் செயலாற்றி வரும் இவர் எங்களது அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், நடுவணரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து தேனியில் நடத்திய சங்கைலக்கிய வார நிகழ்வில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டு செயல்பட்டவர்.
  இவரின் தமிழ்ப்பணிகளை பல்வேறு தளங்களில் எமது த.மு.க.ச. மெச்சி,
 பாராட்டி மகிழ்ந்துள்ளது.
இவண் 
செயலாளர் ப.மோகன்குமாரமங்கலம் 
தமிழாசிரியர்,
த.மு.எ.க.ச. தேனி மாவட்ட ஆசிரியர் கிளை,
4/411, பிசுமி நகர், 
தேனிமாவட்டம். 625531