இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 2 July 2014

இனிக்கும் தமிழ் இலக்கணம்.-------- புலவர் ச.ந. இளங்குமரன்.

  இலக்கணம் என்ற சொல்லுக்கு மொழியின் இயல்பு என்று பொருளாகும்.இலக்கணம், இலக்கியத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிற்பட்டதாயினும் ஒரு மொழியை பிழையின்றி எழுதவும், பேசவும் இன்றியமையாதது இலக்கணமாகும். உலக முதன் மொழியாம் நம் தமிழின் இயல்புகளையும்,மரபுகளையும் முறையாக உணர்ந்தால்தான் மொழியை செம்மையாகக் கையாள முடியும்.இலக்கு-குறிக்கோள்; அணம்=காப்பு எனவும் கூறலாம். மொழியின் அழகைப் பேணிக்காப்பது இலக்கணம் என்றால் அது மிகையில்லை.
     தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும் என்பர். அவை முறையே
1) எழுத்து  2)  சொல் 3) பொருள்  4) யாப்பு   5) அணி

     எழுத்து இலக்கணம் 
   ------------------------------
       அ)  ஒரு மொழிக்கு முதல் காரணமாகவும் காதால் கேட்கும் நுட்பத்தின் காரியமாகவும் தோன்றும் ஒலி எழுதப்பட்டு எழுத்து என்று பொருள் படுகிறது. பேசுவதை ஒலிவடிவ எழுத்து என்றும்,  எழுதுவதை வரிவடிவ எழுத்து என்றும் கூறுவர்.
    == எழுத்து  முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகைப்படும்.
  === முதலெழுத்து .==  உயிரெழுத்துகள் பனிரெண்டும், மெய்யெழுத்துகள் பதினெட்டும் (12+18=30) மொத்தம் முப்பது எழுத்துகள் முதலெழுத்து எனப்படும். காரணம் இவையே உயர்மெய் எழுத்துகள் தோன்றக் காரணமாகின்றன.
   ==   உயிரெழுத்து  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ,  (பனிரெண்டு)
   == மெய்யெழுத்து க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த், ந், ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ள்,ழ்,ற்,ன்,(பதினெட்டு)
   == உயிரெழுத்து  குறில் , நெடில் , என இரண்டு வகைப்படும்.
         (குறில்) அ,இ,உ,எ,ஒ,  என ஐந்து எழுத்துகளாகும்.
         (நெடில்)  ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஐ,ஔ, என ஏழு எழுத்துகளாகும்.

மெய்யெழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம், என மூன்று வகைப்படும்.
  == க,ச,ட,த,ப,ற     வல்லினம்.
  == ங,ஞ,ண,ந,ம,ன,  மெல்லினம்
  == ய,ர,ல,வ,ழ,ள இடையினம்.          
                                                                                                         ( தொடரும்)

No comments:

Post a Comment