இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 4 November 2023

இடைக்காட்டுச் சித்தர்,

இடைக்காட்டுச் சித்தர்

கொங்கணச் சித்தரின் சீடர் என்று சொல்லப்படும் இடைக்காட்டுச் சித்தர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்றும், இவர் இடையர் குலத்தில் பிறந்தவர் என்றும் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது  ஞானம் கிடைக்கப் பெற்றவர் என்றும் சொல்லப்படுகிறது. 

இடைக்காடு என்கின்ற ஊர் மானாமதுரைக்கு அருகில் இருக்கிறது. சிவ நெறியையும் சித்தர் நெறியையும் ஒருசேரப் பின்பற்றும் வழக்குரைஞர் தனுசுக்கோடிப் பாண்டியன் அவர்களும் நானும் மகிழுந்தில் பேசிக்கொண்டே வருகின்றோம். நல்ல மழை. வழியிலே சித்தர் ஆலயத்திற்கு சென்று விட்டு ஊருக்கு செல்லலாம் என்று நான் சொல்கிறேன். நல்ல மழையாக இருக்கிறது அண்ணா, மழை நின்றுவிட்டால் சித்தர் ஆலயத்திற்குச் செல்லுவோம், இல்லை என்றால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோம் என்றார், 

சரி என்று சொல்லிக் கொண்டே பெரும்பாலும் எந்தக் கோயில்களுக்கும் விரும்பி நான் செல்வது இல்லை, ஆனால் இறைவனுக்கு என்னைப் பார்க்கத் தோன்றினால் அவனாகவே என்னை அழைப்பான் என்றவாறு பல்வேறு செய்திகளைக் குறித்துப் பேசிக்கொண்டே வந்தோம்.  

இடைக்காட்டை நெருங்குகின்ற பொழுது அங்கு ஒரு துளி கூட மழை இல்லை. வழக்குரைஞர் சொன்னார் என்னண்ணே  வியப்பாக இருக்கிறது, இந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை என்று. இப்பொழுது நான் சொன்னேன் சித்தர் என்னைப் பார்க்க விரும்புகிறார் என்று.

இடைக்காட்டுப் பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் நிலவ இருக்கிறது என்னும் செய்தியினை, சித்தர் தான் பெற்ற ஞானத்தினால், தொலைநோக்குச் சிந்தனையினால் வருவதை முன்கூட்டியே அறிந்து  கொண்டார். அதை  மக்களிடம் சொல்லுகின்ற பொழுது யாரும் அவரை நம்பவில்லை. அவருக்கு ஏதோ கிறுக்குப் பிடித்து விட்டதாகப் பலரும் பேசியிருக்கிறார்கள்.  ஆனால் அப்பகுதியில் மிகப் பெரிய பஞ்சம் வந்திருக்கிறது. அந்தப் பஞ்சத்திலிருந்து தன்னை அவர் காத்துக் கொண்டிருக்கிறார். பஞ்சத்தில் அடிபட்ட பின்பு தான் மக்கள் சித்தரை நம்பத் தொடங்கி இருக்கின்றனர். பின்பு சித்தரின் வழியைப் பின்பற்றி மக்கள் தங்களது பஞ்சத்தைப் போக்கி இருக்கின்றனர் என்கின்ற செய்தி அவ் ஊரில் அறியப் பெற்றோம். மேலும் இடைக்காட்டுச் சித்தர் திருவண்ணாமலையில் உயிர் ஒடுக்க நிலை எய்தினார் என்ற செய்தியும் அறிந்தோம்.

மக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தைச்  சரி செய்ய முயன்று கோள்களை வணங்கி, கோள்களின் நிலையை மாற்றி அமைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி மாற்றி அமைக்கப்பட்ட இடைக்காட்டுச் சித்தர் ஆலையத்தில் எடுத்த படம் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வழக்குரைஞர்,..

இப்பொழுது இடைக்காட்டுச் சித்தர் ஆலயத்தை விட்டு  மகிழுந்தில் கிளம்பினோம். வண்டியைக் கிளப்பினோம். இதமான சாரல் பெய்யும் அறிகுறி தென்பட்டது. சித்தர் ஆலயத்தை விட்டு வண்டியில் கிளம்பிய ஐந்து மணித் துளிகளில் பெருமழை பெய்யத் தொடங்கியது. 

என்னண்னெ ஒரு பெரிய அதிசயம், வரும் வழியெல்லாம் மழை, இடைக்காட்டூரில் மட்டும் மழை இல்லை. சித்தரைப் பார்த்து விட்டுக் கிளம்பிய உடன் பெருமழை பெய்கிறது என்று வழக்குரைஞர் பதிவு செய்ய, சித்தர் நம்மைப் பார்க்க வேண்டும் என்று அழைத்தார் பார்த்தோம், பேசினோம், பேசினார், விடைபெற்றுக் கிளம்பினோம். இனி வழி எங்கும் மழை தான்... என்று சொல்லிக் கொண்டே வந்தோம். தேனி நாகலாபுரம் வந்து சேரும் வரை தொடர் மழை பெய்து  கொண்டிருந்தது... மழையோடு இல்லத்தை அடைந்த நேரம் இரவு மணி 12-24....

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், 
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், 
தேனி, நாகலாபுரம். 
02-11-2023

No comments:

Post a Comment