இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 29 October 2023

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - ச.ந.இளங்குமரன்

இவர்தான் பசும்பொன்...

"அப்பன் தொழிலை அவன் மகன் செய்ய வேண்டும் அதற்கு இளமையிலேயே பயிற்சி பெற வேண்டும் என்ற பத்தாம் பசலிக் கொள்கையை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்". (26-03-1954 குலக்கல்விக்கு எதிராக சட்டமன்றத்தில்...) 

"பரம்பரை பரம்பரையாக அரிசனங்களும் தேவர்களும் தோளோடு தோள் இணைந்து இருந்தவர்கள். அவர்களைத் தாக்குவதும் துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச் சிந்த வைப்பது போலாகும். அரிசன மக்கள் என் சகோதரர்கள், அவர்களைத் தாக்காதீர்கள். அவர்களைத் தாக்க வேண்டும் என நினைத்தால் முதலில் என்னைக் கொன்று விட்டு அப்புறம் அவர்களிடம் பேசுங்கள் (1957 முதுகுளத்தூர் பொதுக்கூட்டம்)

"இனியும் கைரேகைப் பதிவு சட்டத்திற்கு உட்பட வேண்டாம். நிர்பந்தத்தின் காரணமாக கைரேகையைப் பதிவு செய்யும்படி நேரிட்டால் உங்கள் கட்டை விரல்களை வெட்டிக் கொள்ளுங்கள்" (1948)

இன்றைய காலத்தில் உழைத்து உழைத்து ஓட்டாண்டியாகியிருக்கும் விவசாயிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு கவலையின்றி உண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்கள் நிலச்சுவான்ந்தாரர்கள் தான். நேரிடையாக நிலத்தில் உழுது பயிரிடுபவர்கள் விவசாயிகளா? அல்லது உட்கார்ந்து கொண்டு,  உழைப்பவனை வேலை வாங்கிக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கம் நிலச்சுவான்தாரர் பரம்பரை விவசாயிகளா என்பது இன்னும் இந்த நாட்டில் சரியாக நிர்ணயிக்கப்படாதது ரொம்பவும் துரதிருசுட்டமான விசயமாகும். (1954)

"வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும், விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித் துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி, பசும்பொன் தேவர் தான் பண்டியகுமாரன் " என்று பாராட்டினார் பெரியார்.

"தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். ஆனால் அவர் பேசத்தொடங்கியதும் சிங்கத்தின் கர்ஜனை போலவே இருந்தது. தேவர் அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல், சுத்தமான வீரர் பெரும் தலைவர்" என்றார் அண்ணா.

"தேசபக்திக்கும், மாவீரத்திற்கும் உச்சபட்ச மகத்துவம் எவ்வளவு உண்டோ, அவ்வளவுக்கும் உரியவர். நினைக்கும் போதே வணங்கத்தூண்டும் மகா உத்தமத் தலைவர். ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவர் மாதிரி நிறைவான தலைவரை நாடு உண்டாக்கியதும் இல்லை. உண்டாக்கப் போவதுமில்லை" என்று போற்றிப் புகழ் பாடியவர் யார் தெரியுமா? "இதய தெய்வம்" என்று எல்லோராலும் போற்றப்படும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

"கனல் உமிழும் சொற்பொழிவுகளும் தீரமிக்கச் செயல்களும் நாட்டு விடுதலைக்கான போர்த்தளவாடங்களாக இருந்தன" என்பார் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி.

"தேவர் பேச்சு உள்ளத்திலிருந்து வெளி வருகின்றது. உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி விடுவதால் தேவர் பேச்சு தெய்வப் பேச்சின் தன்மையைப் பெற்று விடுகிறது" என்பார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.

"முருகத் துடிப்புடைய மனிதருள் முருகன்" அருளாளர் திருமுருக கிருபானந்த வாரியார்.

"தேசியம் காக்கும் செம்மல்" திரு.வி.க., 

"வள்ளலாரின் நேரிய நெறியை வாழ்வியலாகக் கொண்டு வாழும் வள்ளலாராய் வாழ்ந்த சன்மார்க்கி பசும்பொன் தேவர் " ச.ந.இளங்குமரன்,

Thursday, 12 October 2023

நல்ல தமிழ் பேசு கல்லூரி மாணவர்களுக்கான போட்டி.

தேனி வையை தமிழ்ச்சங்கம் - நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் உலகத் தமிழ்க் கூடல் 677 ஆம் நிகழ்வு கல்லூரி மாணவ மாணவியருக்கான "நல்ல தமிழ் பேசு" என்னும் போட்டியாக நடந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். 

ஆங்கிலமோ, பிறமொழிச் சொல்லோ கலவாமல் மூன்று நிமிடம் நல்ல தமிழில் பேசவேண்டும். கூறியது கூறல்,   திணறல் இருக்கக் கூடாது . தலைப்பு கொடுக்கப்பட்ட 7 வினாடிகளுக்குள் பேச்சைத் தொடங்கவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும். இவ்விதிமுறைகளுக்கு உட்பட்டு மாணவ மாணவிகள் பலரும் மிக அருமையாகப் பேசினர்.

நிகழ்வுக்கு வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும், உலகத் தமிழ்க்கூடலின் அமைப்பாளருமான புலவர் இளங்குமரன் தலைமை ஏற்றார். போட்டி நடுவர்களாக இணை அமைப்பாளர் தமிழ்ச்செம்மல் முத்துமணி,  நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரன் ஆகியோரும், மதிப்பீட்டாளர்களாக தமிழ்ச்சுடர் முத்துக்குமார், தொல்லியல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர்.

முன்னதாக சென்னை அலைகடல் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்களும், தமிழ்நாடு அரசின் தூய தமிழ்ப்பற்றாளர் முனைவர் தமிழ் மணிகண்டன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன் அவர்கள் நல்ல தமிழ் பேசு போட்டியை மிகச் சிறப்பாக நடத்தினார். 

இப்போட்டியில்  
மோனிஷ் முதலிடம் கிருட்டிணன் கல்லூரி
கோவை,  யோகேஷ்குமார் இரண்டாமிடம் கே.பி.ஆர் கல்லூரி கோவை, த.சுகன்யா மூன்றாம் இடம், கரியாபட்டினம், சின்ன செல்வம் நான்காம் இடம், சென்னை பல்கலைக்கழகம், ஸ்ரீமுகி ஐந்தாம் இடம் கிருட்டிணா கல்லூரி கோவை, செ.நுசரத் பாத்திமா, ஆறாம் இடம், ஔவையார் அரசு மகளிர் கல்லூரி. காரைக்கால்,  ச.பரத் ஏழாமிடம் சென்னை மாநிலக் கல்லூரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

 இவர்களுக்குப் பரிசுத்தொகையாக  1000, 800, 700, 600, 600, 500, 500 ரூபாயை, நற்றமிழ் புலவர் ராசேந்தினரனார், முனைவர் பத்மினி பாலா, மகாலிங்கம் துரைராஜ், கவிஞர் செல்வி செல்வராணி, இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன், தொல்லியல் ஆய்வாளர் செல்வம், தமிழ்ச்சுடர் முத்துக்குமார்,  தொல்காப்பிய அறிஞர் இருளப்பன் ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். 

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.