புலவர் ச.ந.இளங்குமரன் (ந.பாலசுப்ரமணி) நல்ல தமிழறிஞர். இவர் தனது சொந்த ஊரான நாகலாபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் மன்றத்தின் செயலர் மற்றும் பொறுப்பாளராகவும், வையைத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி அதன் நிறுவுநர்-செயலராகவும் செயல்பட்டு வருகிறார்.
கடந்த 18 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசளித்து வருவதோடு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு மரபுக் கவிதை எழுதப் பயிற்சி வழங்கியும், பள்ளி,கல்லூரி மற்றும் பிற அமைப்புகள் நடுத்துகின்ற பல்வேறு போட்டிகளுக்கு நடுவராகவும் செயல்பட்டு வருவதோடு மேடைப் பேச்சாளராகவும் விளங்குகிறார்.
தமிழகம் சார்ந்த கவிஞர்களில் பிற சொல் கலவாத தனித் தமிழில் கவிதை எழுதுவோர் 10 பேருக்கு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
பல்வேறு தமிழ் அறிஞர் பெருமக்களின் புத்தகங்களை வெளியிட்டும், அறிமுகம் செய்தும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதும், பாராட்டும் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
திருக்குறள் முற்றோதல் செய்தும், திருவள்ளுவருக்குச் சிலைகள் நிறுவியும், திருக்குறளை முன்னிலைப்படுத்தி குறள்நெறி தமிழ்த் திருமணங்கள் செய்வித்தும் வருகிறார்.
பல தரதப்பட்ட வார, மாத, இலக்கிய இதழ்களிலும், இணையத்திலும் பல்வேறு வலைதளங்களிலும் கவிதை,கட்டுரை,சிறுகதைகள்,எழுதியும் வருகிறார்.
தமிழகம் சார்ந்துள்ள பல்வேறு கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து கூட்டுக் கவிதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்,
மூன்று நூல்களின் தொகுப்பாசிரியராக விளங்கும் இவர் "தமிழ் என் போர்வாள்" என்னும் கவிதை நூலின் மூலம் நூலாசிரியராகவும் விளங்குகிறார்.
தற்பொழுது இவரின் "கொலை வாளினை எடடா" என்ற கவிதை நூலும், இன்பத்துள் இன்பம் காமம் என்னும் திருக்குறள் இன்பத்துப்பால் குறித்த ஆய்வு நூலும் அச்சாகிக் கொண்டிருக்கிறது.
புலவர் இளங்குமரன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாகச் செய்து வரும் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல பரிசுகளையும், பட்டங்களையும், விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.
இவரின் சிறந்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டி எங்களது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இவருக்கு தமிழ்மொழிச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
அன்புடன்
ஆய்வியல் நிறைஞர் கா.உதயசூரியன், எம்.ஏ,.எம்,பில்,.
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
7/1 இரயில்வே ஸ்டேசன் சாலை,
தேனி-625531