இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 1 January 2015

தமிழறிஞர் புலவர் ச.ந.இளங்குமரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பார்வையில்...

    புலவர் ச.ந.இளங்குமரன் (ந.பாலசுப்ரமணி) நல்ல தமிழறிஞர். இவர் தனது சொந்த ஊரான நாகலாபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் மன்றத்தின் செயலர் மற்றும் பொறுப்பாளராகவும், வையைத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி அதன் நிறுவுநர்-செயலராகவும் செயல்பட்டு வருகிறார்.
     கடந்த 18 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசளித்து வருவதோடு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு மரபுக் கவிதை எழுதப் பயிற்சி வழங்கியும், பள்ளி,கல்லூரி மற்றும் பிற அமைப்புகள் நடுத்துகின்ற பல்வேறு போட்டிகளுக்கு நடுவராகவும் செயல்பட்டு வருவதோடு மேடைப் பேச்சாளராகவும் விளங்குகிறார்.
    தமிழகம் சார்ந்த கவிஞர்களில் பிற சொல் கலவாத தனித் தமிழில் கவிதை எழுதுவோர் 10 பேருக்கு ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.
     பல்வேறு தமிழ் அறிஞர் பெருமக்களின் புத்தகங்களை வெளியிட்டும், அறிமுகம் செய்தும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விருதும், பாராட்டும் வழங்கி சிறப்பித்து வருகிறார்.
     திருக்குறள் முற்றோதல் செய்தும், திருவள்ளுவருக்குச் சிலைகள் நிறுவியும், திருக்குறளை முன்னிலைப்படுத்தி குறள்நெறி தமிழ்த் திருமணங்கள் செய்வித்தும் வருகிறார்.
    பல தரதப்பட்ட வார, மாத, இலக்கிய இதழ்களிலும், இணையத்திலும் பல்வேறு வலைதளங்களிலும் கவிதை,கட்டுரை,சிறுகதைகள்,எழுதியும் வருகிறார்.
    தமிழகம் சார்ந்துள்ள பல்வேறு கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் கவிதைகளைத் தொகுத்து கூட்டுக் கவிதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்,
      மூன்று நூல்களின் தொகுப்பாசிரியராக விளங்கும் இவர் "தமிழ் என் போர்வாள்" என்னும் கவிதை நூலின் மூலம் நூலாசிரியராகவும் விளங்குகிறார்.
   தற்பொழுது இவரின் "கொலை வாளினை எடடா" என்ற கவிதை நூலும், இன்பத்துள் இன்பம் காமம் என்னும் திருக்குறள் இன்பத்துப்பால் குறித்த ஆய்வு நூலும் அச்சாகிக் கொண்டிருக்கிறது.
    புலவர் இளங்குமரன் அவர்கள் கடந்த 20 ஆண்டுகாலமாகச் செய்து வரும் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல பரிசுகளையும், பட்டங்களையும், விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.
   இவரின் சிறந்த தமிழ்த் தொண்டினைப் பாராட்டி எங்களது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இவருக்கு தமிழ்மொழிச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
அன்புடன் 
ஆய்வியல் நிறைஞர் கா.உதயசூரியன், எம்.ஏ,.எம்,பில்,.
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
7/1 இரயில்வே ஸ்டேசன் சாலை, 
தேனி-625531
    

த.மு.எ.க.ச.பார்வையில் புலவர் ச.ந.இளங்குமரன்

திரு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள், தேனிமாவட்டம் நாகலாபுரத்தில் வையைத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி தேனியில் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறார். இவர் மிகச் சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளர். சிறந்த திறனாய்வாளர், மரபுக் கவிதை,சிறுகதை, கட்டுரைகள்,இலக்கிய சொற்பொழிவு உள்ளிட்ட பல தமிழிலக்கியத் தளங்களில் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருபவர்.
    மாவட்டம் மட்டுமல்லாது மாநில அளவில் தமிழ், தமிழ்மொழி சார்ந்த சமூகப்பணி செய்பவர்களில் இவரும் பரவலாகப் பேசப்படுபவர்.
தமிழ்மொழி,தமிழ்சமூகம்,தமிழ் இலக்கியம் சார்ந்த நடுவங்களில் குறிப்பிட்டுக் காட்டும்படியாக
1) பல ஆண்டுகளாக பள்ளி மாணவ மாணவியருக்கு தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தி வருவது 
2) குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி வருவதோடு, தங்களின் பெயருக்கு முன் தலைப்பெழுத்தை தமிழிலேயே எழுத வலியுறுத்துவது. 
3) திருக்குறளை முதன்மைப்படுத்தி தமிழ்நாடெங்கும் பல ஊர்களில் தமிழ்த் திருமணங்கள் நடத்துதல், 
4) நூல்கள் எழுதுதல், சக எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தல்,
5) தமிழ்நாடெங்கும் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள், அறிஞர்கள் ஆகியோர்களுக்கு சமூக நல ஆர்வலர்களுக்கும் பரிசுகள், பட்டங்கள், விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துதல்.
6) தமிழ் அறிஞர்களுக்கு விழா எடுத்தல் என பல எண்ணற்ற பணிகளைச் செய்து வருதல்.
       நேரிய சிந்தனையோடும், உணர்வாற்றலோடும், கெழுமிய முனைப்போடும் செயலாற்றி வரும் இவர் எங்களது அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், நடுவணரசின் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து தேனியில் நடத்திய சங்கைலக்கிய வார நிகழ்வில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டு செயல்பட்டவர்.
  இவரின் தமிழ்ப்பணிகளை பல்வேறு தளங்களில் எமது த.மு.க.ச. மெச்சி,
 பாராட்டி மகிழ்ந்துள்ளது.
இவண் 
செயலாளர் ப.மோகன்குமாரமங்கலம் 
தமிழாசிரியர்,
த.மு.எ.க.ச. தேனி மாவட்ட ஆசிரியர் கிளை,
4/411, பிசுமி நகர், 
தேனிமாவட்டம். 625531