திருக்குறள் 821
எமது ஆசான் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களது பொருளியல் உரை குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன். பொருளியல் உரையில் திருவள்ளுவரின் நட்பு குறித்து பல்வேறு வியத்தகு செய்திகளைக் கொடுத்தார். முனைவர் சரசுவதி அம்மா அவர்கள் ஓரம்போகியார் காட்சியில் நீட்சி வள்ளுவம் என்று எமது உலகத் தமிழ்க் கூடல் நிகழ்வில் பேசினார். சங்க இலக்கியப் பாடல்களின் சாரம் குறித்தும், வள்ளுவம் குறித்தும் அவர் சொன்ன செய்தியைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வு நடைபெற்றது... இப்போது புறநானூற்றுச் செய்தி கூடா நட்பின் குறள் குறித்து எமது ஆசான் பதிவு செய்த செய்தியும், குறிப்பாக திருக்குறளின் சொல்லும் பொருளும் புறநானூற்றில் பதிவவாகி இருந்ததை விளக்கும் முகமாக "கூடா நட்பு"
*கூடா நட்பு* 821.
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
*விளக்கம்*
*சீரிடம் காணின்*
தப்பிப் போக முடியாமல் தக்க இடம் வாய்த்தால்
*எறிதற்கு*
அழித்து ஒழிப்பதற்கு ஏற்ற
*பட்டடை*
கொல்லர் உலைக்களத்துக் காய்ந்த இரும்பைத் தாக்குவதற்கு அமைந்த பட்டடைக்கல் போல்வது
*நேரா நிரந்தவர் நட்பு*
நெஞ்சால் கலவாமல் உருவால் கலந்தவர் நட்பு.
*பட்டடை* என்பது உலைக்கல்
காய்ந்த இரும்பைச் சம்மட்டியால் அடிக்கத் தாங்கும் கல்லாக - இரும்பாக -இருப்பது.
*"இரும்புபயன் படுக்கும் கருங்கைக் கொல்லன்*
*விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் அன்ன வல்லாளன்னே"*
என்பது (புறம்.170)
பிட்டங் கொற்றன் என்பானை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது. இன்றும் கூடட *உலைக்கல்* *பட்டடை* என்பவை வழக்கில் உள்ளவையே!
அடுத்த ஊருக்கு விரைவாகப் போய்வர வேண்டும். காட்டு வழியாக இருப்பதால் நீ துணைக்கு வந்தால் நல்லது என்றான். நண்பன் சொல்லை நம்பினேன். அவன் சொன்ன விரைவு நடையில் இல்லை. பிந்திப் பிந்திப் பின்னே வந்தான். யாரையோ எதிர் நோக்கி வருவது போல் வந்தான். ஒரு சிற்றாறு வந்தது. நீராடிச் செல்லலாம் என்றான். நான் கரையில் நின்றேன். அவன் உடையை அவிழ்த்து வைக்கும் போது அதனுள் ஒரு கத்தி இருக்கக் கண்டேன்.
அவன் நீருள் மூழ்கி வளைய வரும் போது அவன் அறியாமல் கத்தியை எடுத்துப் பார்த்தேன். அதில் என் காதல் பகைவன் பெயர் இருந்தது. எனக்கு ஐயம் உண்டாகியது. செறிந்த காட்டுள் மறைந்து கொண்டேன்.
என் காதல் பகைவனொடு மூவர் உடன் வந்தனர். என்னைக் காணாமல் என் பெயரை ஓங்கி ஓங்கி அழைத்தான். நான் என்னை மேலும் செறிவாக்கிக் கொண்டேன். வந்தவர்கள் நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டாயே என்று அவனைக் கடிந்தனர். என்னைக் காணாதவர்களாய் அவனைத் திட்டிக் கொண்டே திரும்பினர். அவர்கள் போனதைத் தெளிவாக அறிந்து கொண்டு ஊர்க்குப் போகாமல் வேற்றூர் போய்விட்டேன்.
புனைகதை; மலர்ந்த வாழ்வு 26-27, கூடா நட்புக்கு 'நேரா நிரந்தவர்' என்றது அரிய ஆட்சி. நெஞ்சத்தால் நேராதவர். நேர்ந்தவர் போல் காட்டி நிரந்துவிட்டவர் - கலந்து விட்டவர் - என்பதாம். உவமையணி அமைந்தது இப்பாடல்
பொருள்
உள்ளத்தொடு பொருந்தாமல் பொருந்தியது போல் காட்டுவார் நட்பு, சரியான இடம் வாய்க்கக் கண்டால் தாங்குவது போல் இருந்து வெட்டுதற்கு உதவும் (கொல்லா) பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.
( பட்டடை என்பது பட்டறை எனப் பிழை வழக்கில் வழங்கப்படுகிறது)
எமது ஆசான் செந்தமிழ் அந்தணர் பதிவிலிருந்து...
ச.ந.இளங்குமரன்